முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அடுத்தகட்ட விசாரணை நடத்த ஆளுநர் அர்லேக்கர் இன்னும் அனுமதி வழங்கவில்லை என்ற தகவல் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாகத் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் எழுப்பியுள்ள கேள்விகள், திமுக மற்றும் பாஜக இடையேயான மறைமுக உறவு குறித்த விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளன. அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
முன்னாள் அமைச்சர் என்ற அடிப்படையில், செந்தில் பாலாஜி மீது மேல் நடவடிக்கை எடுக்கவும், தொடர்ந்து விசாரணை நடத்தவும் மாநில அரசின் அனுமதி அவசியமாகும். இதற்காக கடந்த மே 15-ஆம் தேதி அமலாக்கத்துறை தரப்பில் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆளுநரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு ஆளுநர் மாளிகைக்குக் கோப்புகளை அனுப்பியது.
தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், செந்தில் பாலாஜி உட்பட ஒருசிலர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கோப்புகள் ஆளுநர் மாளிகையில் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தேங்கிக் கிடக்கின்றன என்றும், அதற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், ”அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆளுநர் ஏன் இன்னும் கையெழுத்திடவில்லை? அவர் யாருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்? இதன் மூலம் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பது வெளிப்படுகிறது.
தமிழகத்தில் பாஜகவின் மறைமுக முகமாகவே திமுக செயல்பட்டு வருகிறது. திமுகவை முன்னிறுத்திப் பின்னாலிருந்து அனைத்தையும் இயக்குவது பாஜகதான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
அமலாக்கத்துறை கோரிய விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதிப்பது ஏன் என்பதற்கு ஆளுநர் மாளிகையும், இந்த விவகாரத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு திமுக அரசும் விளக்கமளிக்க வேண்டும்” என்று அமைச்சர் நிர்மல் குமார் வலியுறுத்தியுள்ளார் இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
