தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்ற தவெக தலைவர் விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் காலியாக அறிவிக்கப்பட்டுள்ள இத்தொகுதியில், வரப்போகும் இடைத்தேர்தலில் சீட் வாங்க தவெக-வுக்குள் தற்போதே ‘காய் நகர்த்தல்’ யுத்தம் ஆரம்பமாகிவிட்டது.
முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணன், லால்குடியில் தோல்வியுற்றாலும் அவருக்கு வாரியத் தலைவர் பதவியைக் கொடுத்து அழகு பார்த்தார் முதல்வர் விஜய். இப்போது அவர் தனது மகன் சிரஞ்சீவிக்கு திருச்சி கிழக்கில் சீட் வாங்க, கட்சியின் முக்கியப் புள்ளியான ஆதவ் அர்ஜுன் மூலமாக ரூட் போட்டு வருகிறார்.

அதேநேரம், அதிமுக-விலிருந்து தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் செங்கோல் வழங்கி, தன் மகன் ஜவஹர்லாலை களமிறக்கத் தீவிரமாக முயன்று வருகிறார். ‘யார் பெரிய ஆள்?’ என்கிற ரீதியில் இரு தரப்பு வாரிசுகளும் செங்கோல் பரிசளித்து ‘தம்ஸ் அப்’ காட்டியது திருச்சியில் பெரும் டாக் ஆஃப் தி டவுன் ஆனது.
களமிறங்கும் நட்சத்திரங்கள்?
வாரிசுகளின் இந்த உள் அரசியல் ரேஸூக்கு நடுவேதான் அந்த அதிரடி ட்விஸ்ட் கசிந்துள்ளது. விஜய்யின் ஆரம்பகால ரசிகர் மன்ற நிர்வாகி ராஜா, மற்றும் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த சகாயம் ஐ.ஏ.எஸ் ஆகியோரின் பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் இத்தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடலாம் என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

பின்னணியில் உள்ள அரசியல் கணக்கு:
திருச்சி கிழக்கு தொகுதியில் கிறிஸ்தவ வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. தற்போது பரிசீலனையில் பலமாக அடிபடும் சகாயம் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகிய இருவருமே கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இங்கு ஹைலைட்!

லாரன்ஸின் சமூகச் சேவைகளும், சகாயத்தின் நேர்மை இமேஜும் தவெக-வின் வாக்கு வங்கியை ஒட்டுமொத்தமாக அள்ளும் என தலைமை கணக்கு போடுவதாகக் கூறப்படுகிறது. இதனால், தங்கள் வாரிசுகளுக்கு சீட் வாங்கிவிடலாம் என ஆவலோடு காத்திருந்த சீனியர் தலைகள், இந்த ‘கிறிஸ்தவ அஸ்திர’ ட்விஸ்ட்டால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். வாரிசுகளின் காய் நகர்த்தலை மீறி, திருச்சி கிழக்கு ‘ஸ்டார்’ தொகுதியாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-ஜான் கண்ணன், சிறப்பு நிருபர், திருச்சி
