சென்னையில் அண்மையில் நடைபெற்ற அரசு பள்ளி கட்டடத் திறப்பு விழாவில் மரபு நெறிமுறைகள் மீறப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இந்த முக்கிய அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழாவின் போது, குத்துவிளக்கு ஏற்றுவது தொடர்பான மரபு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டி, அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமதி மொ.ரா. பல்லவி, பேரவைத் தலைவரிடம் மனு அளித்திருந்தார்.
சென்னை மாநகர மேயர் பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மொ.ரா. பல்லவி ஆகியோருக்கு இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த நெறிமுறை மீறல் தொடர்பான புகாரை ஆய்வு செய்த பேரவைத் தலைவர், சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், சட்டமன்றப் பேரவையின் கண்ணியத்தையும் மாண்பையும் பாதுகாப்பதுடன், உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் மரபு நெறிமுறைகளை நிலைநிறுத்துவது பேரவைத் தலைவராக தனது கடமையும் பொறுப்புமாகும் என்று தெரிவித்தார்.
சட்டமன்றத்திற்குள் மட்டுமின்றி, வெளியூர் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் மக்கள் பிரதிநிதிகளுக்குரிய நடைமுறைகளும் மரபு நெறிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு நிகழ்ச்சிகளில் உரிய முக்கியத்துவமும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்குரிய அங்கீகாரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் பேரவைத் தலைவர் குறிப்பிட்டார்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற மரபு நெறிமுறை மீறல் தொடர்பான சர்ச்சைகள் ஏற்படாமல் இருக்க, அனைத்து தரப்பினரும் அரசின் வழிகாட்டுதல்களையும் நடைமுறை விதிகளையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், அரசு நிகழ்ச்சிகளில் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களின் சிறப்புரிமைகள் மற்றும் மரபு நெறிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
