திருச்சி மாவட்ட அரசியல் களம் எப்போதுமே அனல் பறக்கும் ஒன்றுதான். ஆனால், இப்போது அங்கு வெடித்துள்ள புதிய சர்ச்சை, தமிழக அரசியல் வட்டாரத்தையே உலுக்கத் தொடங்கியுள்ளது. திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி, தவெக முக்கியப் பொறுப்பாளரான எஸ்.ஆர்.சபரி என்பவரைத் தொலைபேசியில் மிகக் கொச்சையாக, ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து, மிரட்டல் விடுத்த விவகாரம்தான் தற்போதைய ஹாட் டாபிக்!
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, திருச்சியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சீட் கிடைக்காத ஏமாற்றம்… கட்சி தாவிய பின்னணி!
நவல்பட்டு விஜி, திமுகவில் பல வருடங்களாகப் பயணித்து, அடிமட்டத் தொண்டனாக இருந்து தெற்கு ஒன்றிய செயலாளர் பதவி வரை உயர்ந்தவர். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளராக வலம் வந்த இவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால், திமுக தலைமை அந்தத் தொகுதியை அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஒதுக்கியது.
இரண்டாவது முறையும் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, மீண்டும் அன்பில் மகேஷுக்கே சீட் வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்தார் விஜி. இதனால், தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு திமுகவிலிருந்து அதிரடியாக விலகி, தவெக-வில் இணைந்தார். தவெக தலைமையும் அவருக்கு உடனடியாக திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்க, அந்தத் தேர்தலில் போட்டியிட்டு அவர் எம்.எல்.ஏ ஆனார்.
எதிர்த்தால் ஒழித்துக் கட்டுவேன்!
வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான பின்பும், தொகுதியில் தனக்கு எதிராகச் செயல்படுபவர்களை அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஒழித்துக்கட்டப் போவதாக நவல்பட்டு விஜி மிரட்டல் விடுத்து வருவதாகப் புகார்கள் எழுந்து வந்தன. அதன் உச்சக்கட்டமாக, தற்போது தவெக-வின் தீவிர ஆதரவாளரும் பொறுப்பாளருமான எஸ்.ஆர்.சபரி என்பவரை விஜி மிரட்டும் ஆடியோ ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில், நாகரிகமற்ற முறையில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி, தவெக நிர்வாகி என்றும் பாராமல் சபரியை விஜி மிரட்டியிருப்பது தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது வெறும் ட்ரெய்லர் தான்…
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஆடியோ முழுமையானது அல்ல, அது வெறும் துண்டுப் பகுதிதான் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தின் முழு ஆடியோவும் வெளியானால், திருச்சி மாவட்ட தவெக-வுக்குள் மாபெரும் அரசியல் பிரளயமே வெடிக்கும் என்று உள்விவரம் தெரிந்தவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
விஜய் எடுக்கப் போகும் அதிரடி முடிவு என்ன?
தன் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டதால், அதிர்ச்சியடைந்த தவெக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சபரி, இந்த விவகாரம் குறித்து கட்சியின் தலைமைக்கு உடனடியாகப் புகார் அனுப்பியுள்ளார். தன் மீது ஆபாச வசவு பாடி, மிரட்டல் விடுத்த எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி மீது கட்சித் தலைமை உடனடியாகவும், கடுமையான முறையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
மக்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சியில், மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினரே, தன் சொந்தக் கட்சி நிர்வாகியை இப்படி ஆபாசமாக மிரட்டியிருப்பது தவெக-வின் பிம்பத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தவெக தலைமை மௌனம் காக்குமா? அல்லது தன் சொந்தக் கட்சி நிர்வாகிக்கு அநீதி இழைத்த எம்.எல்.ஏ மீது ஒழுங்கு நடவடிக்கை என்ற சம்மட்டியைச் சுழற்றுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திருச்சி அரசியல் களம் இப்போது தவெக தலைமையின் அதிரடி முடிவை நோக்கி காத்திருக்கிறது.
-ஜான் கண்ணா, சிறப்பு நிருபர், திருச்சி
