கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சர்வதேச ஓய்வு குறித்து அவரது சகோதரி காட்டியா அவிரோ வெளியிட்டுள்ள தகவல் உலக கால்பந்து ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகங்களுக்கு பேட்டியளித்த காட்டியா அவிரோ, தற்போது நடைபெற்று வரும் 2026 பிபா உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு, ரொனால்டோ சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
மேலும், போர்ச்சுகல் அணி குரோஷியா அணிக்கு எதிரான நாக்-அவுட் சுற்றுப் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு, தனக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி, இந்த உலகக் கோப்பை தொடரே ரொனால்டோவின் “கடைசி நடனம்” (Last Dance)ஆக இருக்கும் என்று அவர் கூறினார்.
ரொனால்டோவின் சர்வதேச கால்பந்து பயணம் விரைவில் நிறைவடையக்கூடும் என்பதால், அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் ரசிகர்கள் முழுமையாக ரசித்து கொண்டாடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, இந்த ஓய்வு முடிவு போர்ச்சுகல் தேசிய அணிக்கானது மட்டுமே என்றும், சவுதி அரேபியாவின் அல்-நாசர் கிளப் அணிக்காக ரொனால்டோ தொடர்ந்து விளையாடுவார் என்றும் காட்டியா அவிரோ தெளிவுபடுத்தினார்.
இதற்கிடையில், தனது சகோதரியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ரொனால்டோ பதிலளிக்கையில், “இப்போது ஓய்வு குறித்து பேசுவதற்கான நேரம் இதுவல்ல” என்று தெரிவித்தார்.
மேலும், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதில்லை என்றும், தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் முழு கவனம் செலுத்தி, போர்ச்சுகல் அணியின் வெற்றிக்காக பங்களிப்பதே தனது முதன்மை நோக்கம் என்றும் கூறினார்.
உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்த பிறகு, தனது குடும்பத்தினருடன் ஆலோசித்து நிதானமாக சரியான முடிவை எடுப்பேன் என்றும் ரொனால்டோ விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது 41 வயதாகும் ரொனால்டோ, குரோஷியா அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்து, உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் கோல் அடித்த மிக வயதான வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
இதையடுத்து, போர்ச்சுகல் அணி தனது அடுத்த போட்டியில் ஜூலை 6-ஆம் தேதி ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள உள்ளது
