தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த இளம் ஹாக்கி வீரர்கள் தொடர்ந்து இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்குத் தேர்வாகி வருவது, அந்தப் பகுதி விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த வரிசையில், பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள சர்வதேச சுற்றுப்பயணப் போட்டிக்கான இந்திய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணியில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளம் ஹாக்கி வீரர் மணிமாறன் இடம்பிடித்துள்ளார்.
ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மணிமாறனின் தேர்வு தமிழக ஹாக்கி ரசிகர்களிடையே உற்சாகத்தையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த மணிமாறன், கோவில்பட்டி சிறப்பு ஹாக்கி விளையாட்டு விடுதியில் (SDAT) பயிற்சி பெற்று வரும் திறமையான இளம் வீரராவார்.
ஹாக்கி இந்தியா அறிவித்துள்ள இந்திய ஜூனியர் அணி, ஜூலை 5 முதல் 18ஆம் தேதி வரை பெல்ஜியம் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் சர்வதேச பயிற்சி மற்றும் சுற்றுப்பயணத் தொடரில் (Belgium Exposure Tour) பங்கேற்க உள்ளது.
இந்தத் தொடரில், இந்திய அணி ஆஸ்திரியா, பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய வலுவான ஐரோப்பிய ஜூனியர் அணிகளை எதிர்த்து விளையாட உள்ளது.
இந்திய அணிக்குத் தேர்வான மணிமாறனை, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் (Hockey Unit of Tamil Nadu) தலைவர் ஜே. சேகர் மனோகரன், செயலாளர் செந்தில் ராஜ்குமார், தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி சங்க நிர்வாகிகள் மற்றும் அவரது பயிற்சியாளர் முத்துக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
ஏற்கனவே கோவில்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரன், சக்திவேல் உள்ளிட்ட வீரர்கள் இந்திய ஹாக்கி அணியில் தடம் பதித்துள்ள நிலையில், தற்போது மணிமாறனும் அந்தப் பெருமைமிக்க பட்டியலில் இணைந்துள்ளார்.
இதன் மூலம், இந்திய ஹாக்கி அணிக்குத் திறமையான வீரர்களை தொடர்ந்து உருவாக்கி வழங்கும் மையமாக கோவில்பட்டி மீண்டும் தனது சிறப்பை நிரூபித்துள்ளது.
