https://republictn.com/

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

3 நிமிடம் 29 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் அவர் எழுப்பிய பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

இந்த வீடியோவுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த இரண்டு ஆண்டுகளின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இந்தியனின் குரலையும் அதிகார மையங்களுக்குக் கொண்டு செல்லும் ஒரே பணிக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீட் (NEET) தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பிரச்சினைகள், தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக எழுப்பிய கேள்விகள் மற்றும் மக்களின் வாக்குகள் திருடப்படுவதாக கூறப்படும் விவகாரங்களுக்கு எதிராக நடத்திய போராட்டங்களும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், “தெருக்களில் இருந்து நாடாளுமன்றம் வரை மக்களின் நம்பிக்கையே எனது மிகப்பெரிய பலம். பயணம் நீண்டது. ஆனால், எனது உறுதிப்பாடு மாறவில்லை. எல்லா முனைகளிலும் மக்களுடன் நின்றேன். இப்போதும் நிற்கிறேன். எப்போதும் நிற்பேன்” என்றும் ராகுல் காந்தி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் ராகுல் காந்தி மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார்.

கடந்த பத்து ஆண்டுகளாக காலியாக இருந்த இந்த அரசியலமைப்புச் சார்ந்த பதவிக்கு, காங்கிரஸ் கட்சி 99 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தகுதி பெற்றார்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் 42 முறை உரையாற்றியதுடன், பல்வேறு முக்கிய விவகாரங்களில் குறுக்கீடுகள் மற்றும் கருத்துப் பதிவுகளையும் மேற்கொண்டுள்ளதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த வீடியோவுடன் பகிர்ந்துள்ள செய்திக்குறிப்பில், ராஜஸ்தானின் கோட்டா நகரில் இருந்து தொடங்கப்பட்ட நாடு தழுவிய மாணவர் பிரச்சாரத்தையும் ராகுல் காந்தி முன்னிலைப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் நீட் (NEET) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களுக்காக பெற்றோர்கள் ஆண்டுதோறும் சுமார் ₹1.3 லட்சம் கோடி செலவிடுகின்றனர் என்றும், அந்தத் தொகை மத்திய அரசின் ஒட்டுமொத்த கல்வி பட்ஜெட்டுக்கு இணையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலை, மாணவர்களின் குடும்பங்களுக்கு மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், “எதிர்க்கட்சித் தலைவரான பிறகு எனது தனிப்பட்ட கனவுகளையும் அச்சங்களையும் ஓரங்கட்டிவிட்டு, அனைத்துக் கட்சியினரையும் அன்போடு அணுகி வருகிறேன்” என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இந்த சிறப்பு வீடியோவும் அதனுடன் வெளியிடப்பட்டுள்ள கருத்துகளும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago