தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணி விதிமுறைகளில் (Service Rules) பல்வேறு முக்கிய மாற்றங்களை செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் போது, தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
இந்த நிலையில், வெளியிடப்பட்டுள்ள புதிய பணி விதிமுறைகளின்படி, பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் இடங்களில், தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 8 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான பல்வேறு மாற்றங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவை விரைவில் அரசாணையாக வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
