https://republictn.com/

மகாராஷ்டிர மாநிலத்தின் ஜால்னா ரயில் நிலையத்தில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி (First AC) பெட்டி, புதுமணத் தம்பதியருக்காக பலூன்கள், ரோஜா மலர்கள் மற்றும் காதல் வாசகங்களால் தேனிலவு அறையைப் போன்று அலங்கரிக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த சம்பவம் தொடர்பாக, முறையான அனுமதியின்றி அலங்காரப் பணியாளர்களை ரயிலுக்குள் அனுமதித்ததாகக் கூறி, அந்த ரயிலில் பணியாற்றிய டிக்கெட் பரிசோதகர் (TTE) கிரிஷ் குமார் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய ரயில்வே தீவிர துறை ரீதியான விசாரணையை மேற்கொண்டுள்ளது.

தகவல்களின்படி, ஜால்னா ரயில் நிலையத்தில் இருந்து மும்பை நோக்கிப் புறப்பட்ட நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி தனியறையை, ஒரு புதுமணத் தம்பதியருக்காக தனியார் அலங்கார நிறுவனம் முற்றிலும் மாற்றியமைத்திருந்தது.

அந்த அறையின் மேற்கூரை முழுவதும் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இருக்கைகள் முழுவதும் ரோஜா இதழ்கள் தூவப்பட்டிருந்தன.

மேலும், சுவர்களில் “I Love You” என்ற காதல் வாசகங்களும் அலங்காரமாக இடம்பெற்றிருந்ததால், அந்த ரயில் பெட்டி தேனிலவு அறையைப் போன்ற தோற்றத்தைப் பெற்றிருந்தது.

தங்களது அலங்காரத் திறமையை விளம்பரப்படுத்தும் நோக்கில், அந்த தனியார் அலங்கார நிறுவனம் இந்தக் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த வீடியோ வேகமாக வைரலாகி, “ஹனிமூன் ஆன் வீல்ஸ்”, “சுகாத் எக்ஸ்பிரஸ்” போன்ற தலைப்புகளில் மீம்ஸ்களாகவும், பரபரப்பான விவாதங்களாகவும் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்த சம்பவம் குறித்து பலரும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். ரயில்களில் பலூன்கள், காகித அலங்காரங்கள் மற்றும் பிற எரியக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துவது தீ விபத்து உள்ளிட்ட பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், இது இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு விதிமுறைகளை நேரடியாக மீறுவதாகவும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

விசாரணையில், இந்த அலங்காரப் பணிகள் அனைத்தும் ரயிலில் பணியிலிருந்த டிக்கெட் பரிசோதகர் (TTE) முன்னிலையிலேயே நடைபெற்றதாக தெரியவந்தது. மேலும், எந்தவித அதிகாரப்பூர்வ அனுமதியும் இல்லாமல் வெளிநபர்களை ரயிலுக்குள் அனுமதித்தது பாதுகாப்பு விதிமீறலாகக் கருதப்பட்டதால், ஜால்னா நிலையத்தின் தலைமை டிக்கெட் பரிசோதகர் கிரிஷ் குமாரை தெற்கு மத்திய ரயில்வே (SCR) நிர்வாகம் உடனடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

அதுமட்டுமின்றி, ரயில்வே பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதோடு, பொதுச் சொத்துகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறப்படும் அந்த தனியார் அலங்கார நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட தம்பதியர் மீதும் துறை ரீதியான விரிவான விசாரணைக்கு இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago