இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் நடைபெறுவது உறுதி என, அனிருத்தின் மாமாவும் மூத்த நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அனிருத் மற்றும் காவ்யா மாறன் காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தன.
இந்த நிலையில், அண்மையில் அளித்த நேர்காணலில் பேசிய ஒய்.ஜி. மகேந்திரன், “எனக்குக் கூறப்பட்ட தகவலின்படி, அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் நடைபெறுவது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அனிருத் மிகவும் அமைதியான, மென்மையான மற்றும் அடக்கமான குணம் கொண்டவர் என்றும், காவ்யா மாறன் சாதாரணமானவர் அல்ல என்றும் அவர் கூறினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற மிகப்பெரிய ஐபிஎல் அணியை திறம்பட நிர்வகிக்கும் திறன் காவ்யா மாறனுக்கு இருப்பதாகவும், அவரது தந்தை கலாநிதி மாறனின் தொழில் திறமைகள் அவரிடமும் இருப்பதாகவும் ஒய்.ஜி. மகேந்திரன் பாராட்டினார்.
அனிருத் மற்றும் காவ்யா மாறன் இருவரும் சிறந்த ஜோடி என்றும், எதிர்காலத்தில் இசை சார்ந்த தொழில்துறையிலும் இணைந்து பெரிய சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தப் பேட்டி வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் குறித்த தகவல்கள் வேகமாக பரவின. இதுவரை வெறும் வதந்திகளாக கருதப்பட்ட இந்த விவகாரத்தில், குடும்ப உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், அனிருத் தரப்பிலிருந்தோ, காவ்யா மாறன் அல்லது கலாநிதி மாறன் குடும்பத் தரப்பிலிருந்தோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருமண தேதி அல்லது இடம் தொடர்பான தகவலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்பெயினில் திருமணம் நடைபெறலாம் என்ற தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்களும் திரையுலகினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
