பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கொடைக்கானலில் கைது. இடைத்தரகர் ஜெயப்பிரகாஷ் தலைமறைவு. அவரது மனைவி தந்தை அண்ணன் ஆகியோரிடம் 7 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடைபெற்றது.
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான, ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6ஆம் தேதி மோசடியாக ரூ. 2 கோடிக்கு பத்திரபதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பழனி அடிவார காவல் நிலையம் சார்பில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ஜூலை 15ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்து வாரிசுதாரர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளம் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி புதூரைச் சேர்ந்த சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன், இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளத்துரை சேதுபதி வழக்கறிஞர் அன்வர்தின் ஆகியோரை கடந்த 29ம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்து திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தினர்.
4 பேரையும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மேஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனிடையே கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து திண்டுக்கல் நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 4 பேரையும் நேற்று 05.08.26 மதியம் முதல் வெள்ளி 07.08.26 மதியம் வரை 3 நாட்கள் சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நிபந்தனையுடன் நீதிபதி உத்தரவிட்டார்.
2 வது நாளாக 4 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மூலம் முன்ஜாமீன் பெற்று கடந்த மாதம் 27ம் தேதி முதல் 3ஆம் தேதி வரை சி பி சி ஐ டி அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆனார்.
இந்த நிலையில் நேற்று 05.08.26 ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் ஆகிய இருவரின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி ராஜசேகர், இருவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தலைமறைவானார். இந்நிலையில் திண்டுக்கல் சிபிசிஐடி போலீசாருக்கு சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து விரைந்து சென்ற போலீசார் வழக்கு பதுங்கியிருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை கைது செய்து விசாரணைக்காக திண்டுக்கல் சி பி சி ஐ டி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்நிலையில் தலைமறைவாக உள்ள இடைத்தரகர் மற்றும் பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஜெயபிரகாஷ் வீட்டில் 8மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதே நிலையில் அவரது மனைவி செண்பகமதி ஜெயபிரகாஷ் தந்தை முத்துச்சாமி அண்ணன் உட்பட 8 பேரை சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து 7மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
