தாம்பரம் அருகே தனது கணவர் மீது அளித்த புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தாம்பரம் இரும்புளியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐஸ்வர்யா மற்றும் முத்துகிருஷ்ணன் தம்பதியர். திருமணத்திற்கு முன்பே அமெரிக்கா சென்று படிக்க வேண்டும் என்ற தனது கணவரின் விருப்பத்திற்காக, அவருக்கு பல லட்சம் ரூபாய் கல்விக் கடன் பெற்றுக் கொடுத்ததாக ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
தனது பெயரில் கல்விக் கடன் பெற்றுக் கொடுத்ததுடன், அந்தக் கடனுக்கான வட்டியையும் இதுவரை தானே செலுத்தி வருவதாகவும், முத்துகிருஷ்ணன் அமெரிக்காவில் படிப்பதற்கான பல்வேறு செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்காக சுமார் 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவில் படிப்பை முடித்து பணியில் சேர்ந்துள்ள முத்துகிருஷ்ணன், தன்னுடன் வாழ விருப்பமில்லை என்றும், பிரிந்து விடலாம் என்றும் தெரிவித்ததாக ஐஸ்வர்யா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களது குழந்தை தற்போது கணவரின் குடும்பத்தினரிடம் இருப்பதாகவும், குழந்தை யாருடைய பராமரிப்பில் உள்ளது, முறையாக உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் தனக்கு தெளிவான தகவல் இல்லை என்றும் ஐஸ்வர்யா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் என் கணவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். திருமணத்திற்கு முன்பே அவர் அமெரிக்கா சென்று படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக என்னிடம் தெரிவித்தார். அவரது விருப்பத்திற்காக நான் அவருக்கு முழுமையாக ஆதரவளித்தேன். திருமணத்திற்கு முன்பே அவருக்காக கல்விக் கடன் வாங்கிக் கொடுத்தேன்.
என் பெயரில் வாங்கிய அந்தக் கடனுக்கான வட்டியையும் இதுவரை நான்தான் செலுத்தி வருகிறேன். அவர் அமெரிக்கா சென்று படிப்பதற்கான அனைத்து செலவுகளையும் நானே பார்த்துக்கொண்டேன். கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் வரை அவருக்காக செலவு செய்திருக்கிறேன்.
ஆனால், என் கணவர் தரப்பிலிருந்து முறையான எந்தப் பதிலும் இல்லை. இன்று இரவு அவர் அமெரிக்காவுக்குப் புறப்படுவதாகத் தெரிகிறது. ஆனால், இதுவரை என்னிடம் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. என் குழந்தை அவர்களிடம் இருக்கிறது. குழந்தை தற்போது யாரிடம் இருக்கிறது, என்ன செய்கிறது என்பதுகூட எனக்குத் தெரியவில்லை.
நேற்று நான் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, குழந்தை சாப்பிடவில்லை என்று தெரிவித்தார்கள். குழந்தைக்கு முறையாக உணவு கொடுக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. இன்று இரவு அவர் அமெரிக்காவுக்குப் புறப்படுவது உறுதியாகியுள்ளது. ஆனால், குழந்தையை அழைத்துச் செல்கிறாரா அல்லது வேறு யாரிடமாவது விட்டுச் செல்கிறாரா என்பது எனக்கு எதுவுமே தெரியவில்லை.
நான் இதுவரை காவல் நிலையத்திற்கு வந்து புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ந்து அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால், இதுவரை எனக்கு முறையான நடவடிக்கையோ, பதிலோ கிடைக்கவில்லை.
என் கணவருக்காக நான் சம்பாதித்த பணம் அனைத்தையும் செலவு செய்து இழந்துவிட்டேன். இப்போது என் குழந்தைக்கும் அவர் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை. எனது கணவரும் என்னுடன் இல்லை; என் குழந்தையும் என்னிடம் இல்லை. இந்த நிலையில் நான் மிகவும் வேதனையில் இருக்கிறேன். எனக்கு நீதி கிடைக்க வேண்டும். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும்” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
தனது கணவர் மீது அளித்த புகாரின் பேரில் உரிய விசாரணை நடத்தி, கணவர் மற்றும் குழந்தை தொடர்பான விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐஸ்வர்யா காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
