Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழக சட்டப்பேரவையில் மேகேதாட்டு அணைத் திட்டம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சௌமியா அன்புமணி விரிவாகக் கருத்து தெரிவித்தார்.

காவிரி நீர்ப் பங்கீட்டின் வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைத்த அவர், ஆண்டுதோறும் காவிரி ஆற்றில் சுமார் 750 டி.எம்.சி. நீர் கிடைப்பதாகக் கணக்கிடப்படுவதாகக் கூறினார். அதில் கர்நாடகாவுக்கு சுமார் 285 டி.எம்.சி. நீருக்கும், தமிழ்நாட்டுக்கு 404 டி.எம்.சி.க்கும் மேல் உரிமை இருந்ததாகவும், பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் தற்போது தமிழ்நாட்டிற்கு 175.25 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கும் தனித்தனி நீர்ப் பங்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வகுத்துள்ள மாதாந்திர அட்டவணையின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு நீரை திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவு இருந்தபோதிலும், அது முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

Republic Tamil

ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டிற்கு 9.18 டி.எம்.சி. நீர் வழங்கப்பட வேண்டிய நிலையில் அதைவிட மிகவும் குறைவான அளவிலேயே நீர் திறக்கப்பட்டதாகவும், ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி. வழங்கப்பட வேண்டியிருந்த நிலையில் அதற்கும் குறைவான அளவே கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார். இதன் விளைவாக காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படியுங்க  காசுக்கு விலைபோன போலீஸாரின் சல்லித்தனம்..! திருப்பத்தூரை உலுக்கும் ரேஷன் அரிசி கடத்தல் ஊழல் ஆடியோ..!

ஆடிப்பெருக்கு காலத்தில் தமிழ்நாட்டிற்கு வந்த நீர், கர்நாடக அரசு ஒப்பந்தப்படி திறந்துவிட்ட நீர் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையால் கபினி அணை நிரம்பியதைத் தொடர்ந்து, உபரி வெள்ளநீரை மட்டுமே கர்நாடக அரசு திறந்துவிட்டதாகவும், ஹேமாவதி, ஹாரங்கி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் சேமிக்கப்பட்டிருந்த காவிரி நீரை திட்டமிட்டு திறக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

எனவே, கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவுகளையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் முறையாகப் பின்பற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற மாநிலங்களவையில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் அளித்த பதில்களையும் அவர் சுட்டிக்காட்டினார். மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு (DPR) இதுவரை மத்திய அரசு அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அனுமதி வழங்கவில்லை என்றும், அதற்கான அதிகாரப்பூர்வ பதில் மாநிலங்களவையில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் நீர்வள உரிமையைப் பாதுகாக்க இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய அவர், தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒருமித்த தீர்மானத்துடன் டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய அரசை நேரில் சந்தித்து தமிழகத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படியுங்க  "என் பேத்தி மேல கையை வைப்பியா?".. காமக் கொடூரனை நடுரோட்டில் துரத்தி துரத்தி வெட்டிய துணிச்சல் பாட்டி!

மேகேதாட்டு அணைத் திட்டம் தமிழ்நாடு–கர்நாடக எல்லையிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைக்கப்பட உள்ளதாகக் கூறிய அவர், காவிரியில் வரும் நீரை கர்நாடகாவில் உள்ள அணைகளில் சேமித்து வைத்து, கூடுதலாக 70 டி.எம்.சி. அளவுக்கு தேக்கி, தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர்கூட செல்லாமல் தடுக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

இந்த அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களுக்குத் தேவையான நீர்வரத்து கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளும் மிகுந்த சிக்கலை எதிர்கொள்ளும் என்று அவர் எச்சரித்தார்.

மேலும், இந்த அணைத் திட்டத்தால் சுமார் 12,500 ஏக்கர் அடர்ந்த வனப்பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும், காவிரி வனவிலங்கு சரணாலயம், மாதேஸ்வரன் மலை வனவிலங்கு சரணாலயம் மற்றும் பிலிகிரி ரங்கநாதசுவாமி புலிகள் காப்பகம் உள்ளிட்ட முக்கிய பாதுகாக்கப்பட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், 700 ஆண்டுகள் பழமையான மரங்கள், அரிய மருத்துவத் தாவரங்கள், நீர்நாய்கள், சாம்பல் நிற நீர்நாய்கள், மகாசீர் வகை மீன்கள் மற்றும் நான்கு கொம்பு மான்கள் உள்ளிட்ட பல அரிய உயிரினங்களின் வாழ்விடங்களும் அழியும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.

இதையும் படியுங்க  இருளைப் போக்கச் சென்ற இடத்தில் பறிபோன உயிர்! மயிலாடுதுறையில் நிகழ்ந்த சோகம்;

சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களின் அடிப்படையில் நீதிமன்றங்களில் தேவையான வழக்குகளைத் தொடர்ந்து, மேகேதாட்டு அணைத் திட்டத்தை சட்டரீதியாகத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், காவிரி விவகாரத்தில் ஏற்கனவே உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தமிழ்நாட்டுக்கு சாதகமாக உள்ள நிலையில், புதிய நடுவர் மன்றத்தை கோருவது தேவையற்ற சிக்கலை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

“மேகேதாட்டு அணை கட்டப்பட வேண்டும் அல்லது கட்டப்படக் கூடாது என்ற இரண்டில் ஒன்றே முடிவாக இருக்க வேண்டும். இடைப்பட்ட சமரச முயற்சிகளுக்கு இடமில்லை. எந்தச் சூழலிலும் மேகேதாட்டு அணை கட்டப்படக் கூடாது என்பதே எங்களின் தெளிவான நிலைப்பாடு,” என்று மருத்துவர் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.

இறுதியாக, தமிழகத்தின் நீர்வள உரிமை, விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், ஒருமித்த தீர்மானத்துடன் டெல்லி சென்று மத்திய அரசிடம் வலுவான கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேகேதாட்டு அணைத் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும் என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும் மருத்துவர் சௌமியா அன்புமணி தனது உரையை நிறைவு செய்தார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago