தமிழக அரசியலிலும் பொதுவாழ்விலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் ஆளுமை எப்போதுமே தனித்துவமானது. அதேபோல, தற்கால அரசியல் சூழலில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையும் உற்றுநோக்கப்படுகிறது. ஊடகவியலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபி பெர்னார்ட் , ஜெயலலிதாவுடனான தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நடிகர் விஜய் குறித்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ஜெயலலிதாவின் கம்பீரம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாகன அணிவகுப்பு (கான்வாய்) செல்லும் போது பொதுமக்கள் மணிக்கணக்கில் நிறுத்தப்படுவது அக்காலத்தில் பெரும் சர்ச்சையாக இருந்தது. இதுகுறித்து 1997-ல் ஜெயலலிதாவிடமே நேரடியாகக் கேள்வி கேட்டேன்.
அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, “எனக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, காவல்துறை குறிப்பிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைப் (Protocol) பின்பற்றியது. பொதுமக்கள் மணிக்கணக்கில் நிறுத்தப்படுவது எனக்குத் தெரியாது. நான் பதவியில் இல்லாத இந்தத் தோல்விக்கு பிந்தைய காலத்தில் தான் இதனை உணர்கிறேன்” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
வெற்றியின் சாபமும் தனிமையும்
ஜெயலலிதா 15 வயதிலேயே உச்சக்கட்ட புகழை அடைந்த ஒரு பெண். தந்தை, தாய், சகோதரன் என யாரும் இல்லாத தனிமையில், தன்னைச் சுற்றி நடக்கும் உண்மைகளை வடிகட்டப்பட்டதகவல்கள் மூலமாகவே அவர் அறிய வேண்டியிருந்தது. “உச்ச பதவியில் இருக்கும் போது வாழ்க்கை ஒரு பிரமிடு போல மாறிவிடும். மேலே செல்லச் செல்ல தனிமை அதிகமாகும். வெற்றியின் மிகப்பெரிய சாபமே தனித்து விடப்படுவதுதான். செயின் ஆஃப் கமாண்ட், நிர்வாகத் திறன் ஆகியவற்றில் ஜெயலலிதா மிகவும் துல்லியமாகவும், விதிகளை முறையாகப் பின்பற்றுபவராகவும் இருந்தார்.

ஒருமுறை, முதலமைச்சர் ஒருவர் கம்ப்யூட்டர், வீடியோ கான்பரன்சிங் மூலமாக நேரடியாக அனைத்து மாவட்ட எஸ்பி மற்றும் கலெக்டர்களுடன் பேசுகிறார் என்று ஜெயலலிதாவிடம் கூறப்பட்ட போது, அதை அவர் கடுமையாக மறுத்தார். “முதலமைச்சருக்கும் மாவட்ட அதிகாரிகளுக்கும் இடையே தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் எனப் பல அடுக்குகள் உள்ளன. சினிமா போல முதலமைச்சர் நேரடியாகப் பேசுவது இ-கவர்னன்ஸ் ஆகாது” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், காலையில் தன் அலுவலகக் கதவைத் திறந்து அவரே பெருக்கிச் சுத்தம் செய்துவிட்டு வேலையைத் தொடங்குவார் என்று யாரோ சொன்ன போது, “என்ன பைத்தியமா அந்த ஆளு? சூப்பர் பவர் நாட்டின் பிரசிடெண்டுக்குச் சுத்தம் செய்ய ஆள் இல்லையா? அதுவா அவர் வேலை?” என்று ஜெயலலிதா கிண்டலாகக் கேட்டார்.
கொடநாட்டிற்கு ஓய்வெடுக்கச் செல்கிறீர்களா என்று கேட்ட ஒரு முக்கியத் தலைவரிடம், “நான் ஓய்வெடுக்கப் போகவில்லை, என்னுடன் 75 முக்கியக் கோப்புகளை எடுத்துச் செல்கிறேன், அங்கு வேலை செய்யவே போகிறேன்” என்று தனது கடமை உணர்வைத் தெளிவுபடுத்தினார்.
விஜய்யின் கொடநாடு பயணம்
‘தலைவா’ பட வெளியீட்டின் போது ஏற்பட்ட சிக்கலின் போது, நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் கொடநாட்டில் ஜெயலலிதாவைச் சந்திக்கச் சென்ற சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் இருந்த எனக்கு, விஜய் கொடநாடு கேட்டில் நிற்பதாக ஒரு பிஆர்ஓ மூலம் போன் கால் வந்தது.
முன் அனுமதி இல்லாமல் திடீரென முதலமைச்சரைச் சந்திக்க முடியாது என்பதை நான் அவர்களுக்கு எடுத்துக்கூறினேன். விஜய் கைகட்டி வீடியோ வெளியிட்டது அவரது பயத்தைக் காட்டவில்லை. லயோலா கல்லூரியில் எனக்கு மாணவராக இருந்தபோதே விஜய் மிகவும் எளிமையானவர். வகுப்பறையில் கேள்வி கேட்டால் கூட கைகட்டிப் பதில் சொல்வது அவரது இயல்பான பாடி லாங்குவேஜ், பண்பு.
“அம்மா இருந்திருந்தால் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருக்க மாட்டார்.. விஜய் கிடையாது” என்று தற்போதைய அரசியல் சூழலில் பலரும் பேசுகிறார்கள். ஜெயலலிதா போன்ற துணிச்சலான, கொள்கைக்காக விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் முடிவெடுக்கும் ஒரு தலைவரை இனி பார்ப்பது அரிது” என்று கூறினார்.
