மலிவு விலையில் மருந்துகளை உற்பத்தி செய்யும் ஒரு முக்கிய நாடாக இந்தியா தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ஆனாலும், மூலப்பொருட்களுக்காக சீனாவை பெருமளவில் சார்ந்திருக்கும்போது, இந்த நற்பெயர் சோதிக்கப்படுகிறது. உலகெங்கிலும் விநியோகச் சங்கிலிகள் மாறிவரும் நிலையில், இந்தியா “உலகின் மருந்தகம்” என்ற நிலையைத் தாண்டி, விநியோகச் சங்கிலியில் ஒரு தலைவராக மாற முடியுமா?
விநியோகச் சங்கிலியில் சீனாவின் ஆதிக்கம்
இந்தியாவில் உள்ள எந்தவொரு கடைக்கும் சென்றால், தனியார் மருந்தகங்களில் உள்ள விலையில் ஒரு சிறு பகுதியிலேயே அத்தியாவசிய மருந்துகளைக் காணலாம். 10,000-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்ட இந்த வலையமைப்பு, அனைவருக்கும் சுகாதாரத்தை எளிதில் கிடைக்கச் செய்வதற்கான இந்தியாவின் முயற்சிகளை அடையாளப்படுத்துகிறது.
ஆனாலும், இந்த மலிவான ஜெனரிக் மருந்துகளுக்குப் பின்னால் ஒரு சிக்கலான உண்மை மறைந்துள்ளது. ஆக்டிவ் ஃபார்மசூட்டிகல் இன்கிரிடியன்ட்ஸ் மற்றும் கெமிக்கல் இன்டர்மீடியட்ஸ் போன்ற மூலப்பொருட்கள். இவை பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகின்றன. விநியோகத்தில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது.
ஆபத்தில் ₹2.9 லட்சம் கோடி
இந்தியாவின் மருந்து ஏற்றுமதி, 2000-01ல் $1.9 பில்லியனாக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் $31.1 பில்லியனாக (சுமார் ரூ. 2.9 லட்சம் கோடி) வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை வழங்குகிறது. ஆனாலும், இந்த வெளிநாட்டு வெற்றி ஒரு உள்நாட்டு சவாலை மறைக்கிறது.
மருந்து ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின்படி, 2023-24ல் இந்தியாவின் மருந்து இறக்குமதியில் சீனாவின் பங்கு மதிப்பு அடிப்படையில் 43.45 சதவீதமாக இருந்தது. இதன் மதிப்பு $3.6 பில்லியன் ஆகும். பென்சிலின் ஜி மற்றும் 6-ஏபிஏ போன்ற சில அத்தியாவசிய மருந்து மூலப்பொருட்களுக்கு, இந்தச் சார்புநிலை முறையே 77% மற்றும் 94.1% என இன்னும் அதிகமாக உள்ளது.
இந்தச் சார்புநிலையின் வேர்கள் மூப்பதாண்டுகளுக்கு முந்தையவை. கடுமையான விலைப்போட்டியை எதிர்கொண்ட இந்திய மருந்து நிறுவனங்கள், குறைந்த விலை ஏபிஐ-கள், இரசாயனங்களுக்காக சீன விநியோகஸ்தர்களை நாடின.
சீனாவிடம் பெரிய அளவிலான உற்பத்தி, ஒருங்கிணைந்த தொழில்துறை தொகுப்புகள், மலிவான பயன்பாட்டு வசதிகள் மற்றும் மூலதனத்திற்கான எளிதான அணுகல் போன்ற சாதகங்கள் இருந்தன. இது பல இந்திய நிறுவனங்கள் உள்ளூர் உற்பத்தியுடன் போட்டியிடுவதை கடினமாக்கியது. இதன் விளைவாக, இந்தியாவின் மருந்துச் சூழலமைப்பு சீனாவின் மூல விநியோகச் சங்கிலியுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்தது. இந்த சமநிலையின்மை இன்றும் தொடர்கிறது.
பெருந்தொற்று இந்த பலவீனங்களைத் தெளிவாக வெளிப்படுத்தியது. சீன ஏற்றுமதி, உலகளாவிய தளவாடங்களில் ஏற்பட்ட இடையூறுகள், ஒரே மூலத்திலிருந்து பொருட்களைப் பெறுவதில் உள்ள அபாயங்களை எதிர்கொள்ள கொள்கை வகுப்பாளர்களைக் கட்டாயப்படுத்தின.
ஜிஎஸ்கே-யின் முன்னாள் செயல் துணைத் தலைவரும், மூத்த மருந்து ஆய்வாளருமான சலில் கல்லியன்பூர் சுட்டிக்காட்டியபடி, சீனாவின் பெரிய ஆலைகளும் ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலியும் அதற்கு ஒரு நிலையான செலவு நன்மையை அளிக்கின்றன. அடிப்படை இரசாயனங்கள் முதல் மொத்த மருந்துகள் வரை இந்தியா ஒரு முழுமையான சூழலமைப்பை உருவாக்கும் வரை, இறக்குமதி சார்புநிலை ஒரு பொருளாதாரத் தேவையாகவே இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
புவிசார் அரசியல் பதட்டங்கள், பெருந்தொற்றால் ஏற்பட்ட இடையூறுகள், அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் சீன மருந்துப் பொருட்களின் விநியோகத்தைச் சார்ந்திருப்பதைக் குறைக்கத் தூண்டியுள்ளன. அமெரிக்கா, பயோசெக்யூர் சட்டம் மற்றும் முக்கிய செயல் மருந்துப் பொருட்கள் இருப்பு போன்ற நடவடிக்கைகளை இயற்றியுள்ளது, அதே நேரத்தில் ஐரோப்பாவின் முக்கிய மருந்துகள் சட்டம் இதே போன்ற நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னேற்றங்கள் இந்தியாவிற்கு ஒரு சாத்தியமான வாய்ப்பை வழங்குகின்றன. குறிப்பாக உலகளாவிய வாங்குபவர்கள் முடிக்கப்பட்ட மருந்துகளுக்கு மட்டுமல்லாமல், முழு மதிப்புச் சங்கிலிக்கும் மாற்று மற்றும் நம்பகமான விநியோகஸ்தர்களைத் தேடுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்க எஃப்டிஏ-வால் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தித் தளங்களின் மிகப்பெரிய தொகுப்புகளில் ஒன்று இந்தியாவில் உள்ளது. இது உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசித் தேவைகளில் சுமார் 65-70 சதவீதத்தை வழங்குகிறது. உலகின் முதல் 25 ஜெனரிக் மருந்து நிறுவனங்களில் 10 இந்தியாவைச் சேர்ந்தவை என்று அரசாங்கம் வலியுறுத்துகிறது.
“உலகின் மருந்தகம்” என்ற இந்தியாவின் உலகளாவிய அங்கீகாரம் வெறும் வதந்தி அல்ல—அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் 60 சதவீதம் இந்திய ஆலைகளிலிருந்து வருகின்றன என்று ஸைடஸ் லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷர்வில் படேல் கூறுகிறார். ஆனாலும், போட்டித்தன்மை, நம்பகத்தன்மையை நிலைநிறுத்துவதற்கு, விநியோகச் சங்கிலியை உள்நாட்டிலேயே அமைத்து, வெளிச் சார்புநிலையைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
“சீனா+1” உத்தியானது, உலகளாவிய மருந்து நிறுவனங்கள் சீனாவிலிருந்து தங்கள் மூலப்பொருட்களைப் பல்வகைப்படுத்துவதை உள்ளடக்கியது. இது ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பாகக் கருதப்படுகிறது. இருப்பினும், முக்கிய இடைநிலைப் பொருட்களும் தொடக்க மூலப்பொருட்களும் இன்னும் சீன விநியோகஸ்தர்களிடமிருந்து வந்தால், ஏபிஐ உற்பத்தியை விரிவுபடுத்துவது மட்டும் போதாது என்று தொழில்துறைத் தலைவர்கள் எச்சரிக்கின்றனர்.
மருந்து ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் தலைவர் நமித் ஜோஷி கூறுகையில், ”புதிய கூட்டாளர்களை மதிப்பிடும்போது உலகளாவிய வாடிக்கையாளர்கள் முழு விநியோகச் சங்கிலியையும் உன்னிப்பாக ஆராய்கின்றனர். எனவே, முடிக்கப்பட்ட மருந்துகளின் ஏற்றுமதி அதிகரித்தாலும், இறக்குமதி செய்யப்படும் இடைநிலைப் பொருட்களைப் பெரிதும் சார்ந்திருக்கும் இந்திய உற்பத்தியாளர்கள் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.
இந்தச் சவால் மருந்துத் துறைக்கு மட்டும் உரியதல்ல. வேளாண் வேதிப்பொருட்கள் மற்றும் சாயங்கள் போன்ற துறைகளில் இந்தியாவின் இரசாயனத் தொழில் வலுவாக இருந்தாலும், 2024-25 நிதியாண்டில் 54 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள இரசாயனங்களை அது இறக்குமதி செய்தது.
தொழில்துறை மதிப்பீடுகளின்படி, பாராசிட்டமால், அமோக்ஸிசிலின் போன்ற மருந்து இடைநிலைப் பொருட்களுக்கான இறக்குமதி சார்பு 50 முதல் 80 சதவீதம் வரை உள்ளது. 2024-ல் உள்நாட்டு இரசாயன சந்தையின் மதிப்பு 250 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்ட போதிலும், மூலப்பொருட்களில் குறிப்பிடத்தக்க பற்றாக்குறைகள் நீடிக்கின்றன.
இந்த அபாயங்களை உணர்ந்து, இந்திய அரசாங்கம் 2020-ல் மொத்த மருந்துகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது 41 முக்கிய ஏபிஐ-கள், இடைநிலைப் பொருட்களின் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க ₹6,940 கோடியை ஒதுக்கியது. ஆந்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பிரத்யேக மொத்த மருந்துப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இலக்கு வைக்கப்பட்ட 26 தயாரிப்புகளுக்கு தற்போது உற்பத்தித் திறன் நிறுவப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பென்சிலின் ஜி மற்றும் கிளாவுலானிக் அமிலத்தை உற்பத்தி செய்வதில் திட்டங்கள் கவனம் செலுத்துவதாகவும் அரசாங்கம் தெரிவிக்கிறது. இவை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் உற்பத்தித் துறையில் இல்லாமல் இருந்தன. அவை இப்போது காக்கிநாடா, நாலகரில் செயல்படுகின்றன.
இருப்பினும், நிதிச் சலுகைகள் மட்டும் இறக்குமதிப் போக்கை மாற்றியமைக்கவில்லை. 2014-15 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் மொத்த மருந்து இறக்குமதி, முந்தைய ஆண்டை விட 13% அதிகரித்து, ஏற்றுமதி வளர்ச்சிக்கு இணையாக உள்ளது.
2001 முதல் 2024 வரை, முடிக்கப்பட்ட மருந்து ஏற்றுமதி சுமார் $1 பில்லியனிலிருந்து $23.3 பில்லியனாக அதிகரித்துள்ளது. இருப்பினும், அதே காலகட்டத்தில் ஏபிஐ மற்றும் இடைநிலை இறக்குமதிகள் $1.8 பில்லியனிலிருந்து சுமார் $26 பில்லியனாக அதிகரித்துள்ளன.
இந்தியாவின் மருந்துச் சந்தையின் தற்போதைய மதிப்பு சுமார் $60 பில்லியன் ஆகும். இதை ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவதே இலக்கு. இது ஏபிஐ மற்றும் இடைநிலைகளுக்கான தேவையை மேலும் அதிகரிக்கும். ஆயுஷ்மான் பாரத் மற்றும் ஜன் அவுஷதி போன்ற திட்டங்களின் விரிவாக்கம், சிறிய நகரங்களில் வளர்ந்து வரும் மருத்துவமனை உள்கட்டமைப்புடன் சேர்ந்து, மருந்துகள், விநியோகங்களுக்கான தேவையை மேலும் அதிகரிக்கும்.
சீனா+1 வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள, சிறப்பு இரசாயனங்கள் முதல் அடிப்படைப் பயன்பாடுகள் மற்றும் தளவாடங்கள் வரையிலான முழு மதிப்புச் சங்கிலியிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் மருந்துத் துறை ஒரு முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. சீனாவை மையமாகக் கொண்ட விநியோகச் சங்கிலிக்கு மாற்றுகளை உலகம் அதிகளவில் தேடி வருகிறது. ஜெனரிக் மருந்துகள், தடுப்பூசிகளில் இந்தியாவின் திறன்கள் ஈடு இணையற்றவை. இருப்பினும், நாடு முக்கிய மூலப்பொருட்களை விரைவாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து, ஒரு ஒருங்கிணைந்த சூழலமைப்பை உருவாக்காவிட்டால், உலகின் மருந்தகம் என்ற அதன் பங்கு பெருகிவரும் அபாயங்களை எதிர்கொள்ளக்கூடும். உலகளாவிய மருந்து விநியோகச் சங்கிலியில் இந்தியா சார்பு நிலையிலிருந்து தலைமை நிலைக்கு நகர முடியுமா என்பதை அடுத்த சில ஆண்டுகளில் வெளிப்படும்.
