Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

உங்களிடம் ஒரு முக்கியமான கேள்வி. நீங்கள் இந்திய குடிமகனா?

“என்னங்க இப்படி கேட்டுட்டீங்க?” என்று நீங்கள் கேட்கலாம். என்னிடம் ஆதார் அட்டை இருக்கிறது, வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது, வெளிநாடு சென்ற பாஸ்போர்ட்டும் இருக்கிறது. இதற்குப் பிறகு நான் இந்திய குடிமகன் தான் என பெருமையாக சொல்லுவீர்களா?

ஆனால் சட்டப்படி, இந்த எந்த ஒரு ஆவணமும் நீங்கள் இந்திய குடிமகன் என்பதற்கான முழுமையான ஆதாரம் அல்ல என்று சொன்னால் நம்புவீர்களா?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த அரசு அடையாள அட்டைகளின் பின்னணியில் உள்ள முக்கியமான சட்ட உண்மைகளை தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

பலரும் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலே நாம் இந்திய குடிமகன் என்று நினைத்து வருகிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. ஆதார் அட்டை என்பது இந்தியாவில் வசிக்கும் ஒருவருக்கு வழங்கப்படும் தனித்துவமான அடையாள எண் மட்டுமே.

இந்தியாவில் 182 நாட்கள் தொடர்ந்து வசிக்கும் வெளிநாட்டவர்களும் கூட ஆதார் அட்டை பெற முடியும். எனவே இது குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்பது ஆதார் சட்டத்திலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  விர்ர்ரென ஏறும் இந்தியா..! பொருளாதாரத்தில் உலகை அதிரவைக்கும் புலிப் பாய்ச்சல்..! இந்த வேகம் நிற்காது..!

வாக்காளர் அடையாள அட்டை என்பது தேர்தலில் வாக்களிப்பதற்கான தகுதி ஆவணம் மட்டுமே. சில நேரங்களில் தவறுதலாக வெளிநாட்டவர்கள் அல்லது வெளிமாநிலத்தவர்களின் பெயர்கள் கூட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக செய்திகளில் நாம் பார்த்திருக்கிறோம். எனவே நீதிமன்றங்களும் இதை குடியுரிமைக்கான இறுதி ஆதாரமாக ஏற்றுக்கொள்ளவில்லை.

பாஸ்போர்ட் பற்றி பேசினால், அது வெளிநாடு பயணத்திற்கான ஒரு பயண ஆவணம் மட்டுமே. பொதுவாக இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டாலும், குடியுரிமை சட்டப்படி இதுவும் ஒருவரின் குடியுரிமையை 100% நிரூபிக்கும் இறுதி ஆதாரம் அல்ல.

அப்படியானால், ஒருவர் இந்திய குடிமகன் என்பதை எப்படித் தான் நிரூபிப்பது?

இங்கே தான் இந்திய குடியுரிமைச் சட்டம், 1955 படி ஒரு முக்கியமான விதி உள்ளது. நமது குடியுரிமை என்பது நாம் எப்போது பிறந்தோம், எங்கு பிறந்தோம், நமது பெற்றோர் யார் என்பதின் அடிப்படையில் சட்டப்படி தீர்மானிக்கப்படுகிறது.

இதனை மூன்று காலகட்டங்களாகப் பிரித்து புரிந்துகொள்ளலாம்:

முதலில், 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூலை 1 வரை இந்தியாவில் பிறந்தவர்கள், பெற்றோர் யாராக இருந்தாலும், பிறப்பால் இந்திய குடிமகனாகக் கருதப்படுகிறார்கள்.

இதையும் படியுங்க  தமிழுக்காக காபி பொடியில் உலக சாதனை! இணையத்தை ஆக்கிரமிக்கும் ஓவியம்!

அடுத்து, 1987 ஜூலை 1 முதல் 2004 டிசம்பர் 3 வரை இந்தியாவில் பிறந்தவர்கள், அவர்களின் பெற்றோரில் ஒருவர் அந்த நேரத்தில் இந்திய குடிமகனாக இருந்திருக்க வேண்டும்.

2004 டிசம்பர் 3க்கு பிறகு பிறந்தவர்களுக்கு விதிமுறை மேலும் கடுமையாக உள்ளது. அவர்கள் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும், அதே சமயம் பெற்றோர் இருவரும் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். அல்லது ஒரு பெற்றோர் இந்திய குடிமகனாகவும், மற்றொருவர் சட்டவிரோத குடியேறியவராக இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.

அப்படியானால், ஒருவர் தனது குடியுரிமையை சட்டப்படி சந்தேகமின்றி நிரூபிக்க என்ன முக்கிய ஆவணம் தேவை?

இங்கே தான் பிறப்பு சான்றிதழ் மிக முக்கியமானதாகிறது. குறிப்பாக 1987 அல்லது 2004க்கு பிறகு பிறந்தவர்கள் என்றால், தங்களது பிறப்பு சான்றிதழுடன் பெற்றோரின் பிறப்பு சான்றிதழ் அல்லது பெற்றோரின் குடியுரிமை தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

அதாவது, தலைமுறை வழியாக உங்கள் குடியுரிமையை ஆவணங்களின் மூலம் நிரூபிப்பதே சட்ட ரீதியான முக்கிய ஆதாரமாகும்.

இதையும் படியுங்க  "எங்க அக்கவுண்ட்ட வேணா முடக்கலாம்.. எங்கள முடக்க முடியாது! டெல்லியில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' மாஸ் என்ட்ரி!"

ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை அடையாளம் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் பயன்படுகின்றன என்பது மாற்றுக்கருத்தல்ல. ஆனால் குடியுரிமை என்ற சட்ட ரீதியான அடிப்படையில், பிறப்பு சான்றிதழ் மற்றும் தொடர்புடைய ஆவணங்களே முக்கியமான ஆதாரங்களாகின்றன.

எனவே, உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago