தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியபோது கூறிய “குட்டிக்கதை” அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கதை திமுகவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அதற்கு திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் நிறைவு நாளில், கவர்னர் உரைக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சியினரை விமர்சிக்கும் வகையில் ஒரு குட்டிக்கதையை கூறியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், “குட்டிக்கதை சொல்கிறேன் என்ற முதலமைச்சரின் பேச்சு ஒரு உளறல். அவர் இன்னும் நடிகர் விஜய் என்ற எண்ணத்தில்தான் செயல்படுகிறார்; இனியாவது முதலமைச்சராக நடந்து கொள்ள வேண்டும்” என்று விமர்சித்தார்.
மேலும், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவனைத் தேடும் மனைவியின் கதை தமிழ்நாட்டுக்கே தெரியும் எனக் குறிப்பிட்டு, விஜயின் கருத்துக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக மற்றும் தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் நேரடி கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் மகனும், ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான இன்பன் உதயநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவர் தனது தந்தை உதயநிதியின் கருத்தைப் பகிர்ந்ததுடன், நடிகர் தனுஷ் நடித்த “அநேகன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “டங்காமாரி ஊதாரி” பாடலின் சில வரிகளையும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவை பலரும் முதலமைச்சர் விஜயை மறைமுகமாக விமர்சிக்கும் முயற்சியாகக் கருதி விவாதித்து வருகின்றனர்.
21 வயதான இன்பன் உதயநிதி, இதுவரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் குடும்பப் புகைப்படங்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய பதிவுகளை மட்டுமே பகிர்ந்து வந்த நிலையில், முதல்முறையாக அரசியல் சார்ந்த பதிவை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சட்டப்பேரவையில் விஜய் மற்றும் உதயநிதி இடையே நடந்த வார்த்தைப் பரிமாற்றம் தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
அரசியல் ரீதியான விமர்சனங்களைத் தாண்டி, தலைவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை சமூக வலைதளங்களில் இழுப்பது பொருத்தமற்றது என்றும், அரசியல் விவாதங்கள் கொள்கை அடிப்படையில் நடைபெற வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் மற்றும் சமூக வலைதள வட்டாரங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
