தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பாலக்கரை பகுதியில் சிறப்பு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை சபாநாயகர் ரவிசங்கர், ”எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டபேரவையில் விமர்சனம் வைத்துவிட்டு. டிவி பார்க்க சென்றுவிட்டார். முதல்வர் பேசும் போது முறையாக சபாநாயகரின் அனுமதி கேட்ட பிறகு தான் சைகை செய்தார். எதிர் புறத்தில் பேசுபவர்கள் ஒரு சிலர் ஒருமையில், கெட்ட வார்த்தையில் பேசினார்கள். அதை தான் சபாநாயகர் கண்டித்தார்” . என்றார்.
சட்டபேரவையில் முதல்வர் பேசியது விமர்சனம் செய்யபடுகிறதே என்ற கேள்விக்கு, ”அனைவரும் பாராட்டினார்கள். எந்த வகையில் விமர்சனம் வந்தது” என்றார்.
முதல்வர் நடிகராகவும், சபாநாயகர் இயக்குனராகவும் காணப்பட்டார்கள் என உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார் என்ற கேள்விக்கு, ”அதை பார்த்து பார்த்து படிச்சாரே, கீழே பார்த்து படிச்சாரே அதை சொல்லுறீங்களா?”
முதல்வர் பேசும் போதே சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள். இதை எப்படி பார்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ” உங்களை போல தான் நானும் பார்க்கிறேன்.. அவர்களை நம்பி ஓட்டு போட்ட மக்கள் தான் சிந்திக்க வேண்டும்” என தெரிவித்தார்.
