இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்க எடுத்த ஒரு முடிவு, இன்று இவ்வளவு பெரிய வெற்றியாக மாறியிருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சமீப காலங்களில் எந்தப் படத்துக்கும் இவ்வளவு விரைவாகவும் உறுதியான முறையிலும் முடிவுகள் எடுக்கப்பட்டதில்லை. இந்தப் படத்தின் முதல் மீட்டிங்கிலிருந்தே எல்லாமே நல்லபடியாக அமைய ஆரம்பிச்சது.
இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க RJ Balaji-யின் நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் தான் காரணம். அதேபோல் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் பிரகாஷ், பிரபு ஆகியோரின் ஆதரவும் இந்தப் பயணத்தில் மிக முக்கியமானது.
‘கருப்பு’ திரைப்படம் நாங்க எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. ரசிகர்கள் கொடுத்த அன்பும் ஆதரவும் எங்களை ரொம்ப நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. சமீப காலங்களில் திரையரங்குகளில் இப்படியான வரவேற்பை நான் பார்த்ததே இல்லை. இந்தப் படத்தில் ஒரு தெய்வீகமான சக்தி இருப்பது போல நாங்களெல்லாம் உணர்கிறோம்.
தமிழ்நாட்டைத் தாண்டி கேரளா, ஆந்திரா, அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, யூகே, அமெரிக்கா, துபாய் என்று உலகம் முழுக்க ஒரே மாதிரியான அன்பும் வரவேற்பும் கிடைக்கிறது. இதைப் பார்க்கும்போது இந்தத் தொழிலை இன்னும் அதிக அன்போடு செய்யணும் என்று தோணுது.
கிளைமாக்ஸில் வரும் ‘கருப்பு’ பாடல், படத்தின் எடிட்டிங் முடிந்த ஐந்து மாதங்களுக்கு பிறகுதான் உருவானது. ஆரம்பத்தில் அது தேவையற்ற செலவாக கூட தோன்றியிருக்கலாம். ஆனால், இந்தப் படத்துக்காக தேவையானதை முழுமையாக செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையோடு எல்லாரும் ஒன்றாக நின்றதால்தான் இன்று அந்தப் பாடல் படத்தின் பெரிய பலமாக மாறியிருக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரையரங்குகளில் கொடுக்கும் வரவேற்பும், மருத்துவமனைகளில் கூட இந்தப் படத்துக்காக போஸ்டர்கள் வைத்து கொண்டாடுறதையும் பார்க்கும்போது ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு.
இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சென்ற ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்று சூர்யா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
