https://republictn.com/

தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு துறையிலும் என்னென்ன முறைகேடுகள் நடந்தன, அவற்றால் அரசுக்கு எவ்வளவு கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது என்பது குறித்த விரிவான ஆய்வுகள் கடந்த ஒரு மாதமாகத் தலைமைச் செயலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் வெளிவந்துள்ள ஊழல் புகார்கள் முதல்வர் விஜயை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த ஆட்சியில் டாஸ்மாக் துறையில் மதுபான ஆலைகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் போது, ஒரு ஹாட் பாக்ஸில் ₹90, பீர் பெட்டிக்கு ₹40 என ஆளும் கட்சிப் புள்ளிகளுக்கு ‘கட்சி நிதி’ என்ற பெயரில் மாதந்தோறும் சுமார் 100 கோடி ரூபாய் லஞ்சமாகச் சென்றடைந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

தற்போதைய தவெக அரசு இந்த கட்டண வசூல் முறையில் அதிரடி மாற்றம் செய்து, இனி இந்தத் தொகை நேரடியாக அரசு கணக்கில் சேரும்படி வழிவகை செய்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ₹1200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கவுள்ளது.

டாஸ்மாக் முறைகேடுகளைத் தாண்டி, பள்ளி, அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் இலவச முட்டை கொள்முதலிலும் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது தணிக்கையில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 53.99 லட்சம் முட்டைகளும், மாதத்திற்குச் சுமார் 10 முதல் 11 கோடி முட்டைகளும் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இதில், ஒரு முட்டைக்கு 10 காசு வீதம் கடந்த ஆளும் கட்சியின் முக்கியப் புள்ளியின் வீட்டிற்கு நேரடியாகப் பணம் சென்று சேர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த மட்டங்களில் 8 காசு, 5 காசு எனப் படிநிலைகளில் லஞ்சம் கைமாறியுள்ளது. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற பெரிய துறைகளில் தான் ‘ஃபேமிலி ஃபண்ட்’, ‘பார்ட்டி ஃபண்ட்’ வசூலிப்பார்கள் என்றால், ஏழைக் குழந்தைகள் உண்ணும் முட்டையைக் கூட விட்டுவைக்கவில்லையா என்று தணிக்கை விவரங்களைக் கேட்டு முதல்வர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுமட்டுமின்றி, முட்டைகளை மலிவு விலையில் மொத்தமாக வாங்கி, குளிர்சாதனக் கிடங்குகளில் மாதக்கணக்கில் சேமித்து வைத்துக் குழந்தைகளுக்கு விநியோகிப்பதாகப் பாஜக் தலைவர் அண்ணாமலை முன்பு வெளியிட்டிருந்த சமூக ஊடகப் பதிவும் இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசு ஒரு முட்டைக்கு ₹5.63 நிலையான விலை வழங்கும் போது, சந்தையில் விலை குறையும் காலத்தில் (உதாரணமாக ₹3.70 ஆகக் குறைந்த போது) ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதனக் கிடங்குகளில் சேமித்து வைத்துள்ளனர். நீண்ட நாட்கள் சேமிக்கப்படும் முட்டைகளின் தரம், ஊட்டச்சத்து குறைந்து, அவை அழுகிய முட்டைகளாகக் கிராமப்புற மாணவர்களுக்குச் சென்றடைவதாகக் கடந்த ஆட்சியில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தவெக ஆட்சியிலும் இந்த அவலநிலை தொடரக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் ஆரோக்கியத்தோடு விளையாடி, முட்டைக்கு 10 பைசா வீதம் மேலிடத்திற்கு வசூல் செய்து கொடுக்கப்பட்ட இந்த ஊழல் விவரங்கள் தற்போதைய முதல்வர் விஜயை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. விரைவில் இதுகுறித்த விரிவான ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் என்றும், அப்போது திமுகவிற்குச் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடும் நெருக்கடிகள் ஏற்படும் என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 minutes ago at 2 minutes ago