https://republictn.com/

இருபெரும் திராவிடக் கட்சிகளான திமுக – அதிமுக ஆகிய இரண்டும் தற்போதைய தவெக அரசை வீழ்த்துவதில் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள். கட்சி தொடங்கி மிகக் குறுகிய காலத்திலேயே நடிகர் விஜய் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததை இரு திராவிடக் கட்சிகளின் தலைமைகளாலும் இன்னும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

அரசியல் எதிர்காலப் பயம்
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, இந்த ஐந்து ஆண்டுகளும் விஜய் ஆட்சியில் நீடித்தால், இரு திராவிடக் கட்சிகளின் அரசியல் எதிர்காலமே அஸ்தமனமாகிவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் முதல் பல்வேறு வாரியப் பதவிகள் வரை எதையுமே தங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்ற இக்கட்டான நிலைக்கு இரு கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால், எவ்வளவு பொருளாதாரச் செலவுகள் ஆனாலும் பரவாயில்லை, தற்போதைய ஆட்சியை கலைத்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் திராவிடக் கட்சிகளின் முக்கியப் புள்ளிகள் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘ஸ்வீட் பாக்ஸ்’ பார்முலா
தற்போது தவெக அரசிடம் 107 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளதால், சொற்பமான கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஒரு மைனாரிட்டி அரசே நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், குறைந்தது 10 எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்தால் ஆட்சியை எளிதாகக் கவிழ்த்துவிடலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகப் பல எம்.எல்.ஏக்களை முக்கிய டார்க்கெட்டாக வைத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ரசிகர் மன்றக் காலம் தொட்டு விஜயுடன் பயணித்தும், தற்போது தங்களுக்குப் பெரிய அளவில் அங்கீகாரமோ அமைச்சர் பதவியோ கிடைக்கவில்லை என அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏக்கள். மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதால் புழுக்கத்தில் இருக்கும் எளிய பின்னணி கொண்ட எம்.எல்.ஏக்கள், இவர்களை நாசுக்காக அணுகி, “நீங்கள் இன்னும் 10 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்தாலும் கிடைக்காத லைஃப்-டைம் செட்டில்மென்ட்டைத் தருகிறோம். பதவி விலகினால் மட்டும் போதும்” என்ற ரீதியில் பிரம்மாண்ட டீல்கள் பேசப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சியை பலவீனப்படுத்த இரு முக்கிய உத்திகள் கையில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக தவெக கட்சியின் அதிருப்தி நிர்வாகிகளை வளைத்து, “ஆட்சி நிர்வாகம் சரியில்லை” எனப் பொதுவெளியில் பேச வைப்பது, தங்களின் கட்சிகளுக்குக் கூட்டம் கூட்டமாகத் தாவ வைப்பது.

இரண்டாவது உத்தி, முன்பு டிடிவி.தினகரன் பாணியில், ஆளுநரிடம் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற வைப்பது அல்லது எம்.எல்.ஏக்களை நேரடியாகப் பதவி விலகச் செய்வது. இந்த வேலைகளில் திமுக தரப்பில் மேலிட முக்கியப் புள்ளியும், அதிமுக தரப்பில் தலைமைக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினரும், ஒரு முன்னணி பில்டரும் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு இரு திராவிடக் கட்சிகளுக்குள் இருக்கும் உட்கட்சி நெருக்கடிகளும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. அதிமுகவில் தொடர் தோல்விகளால் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக அதிருப்திக் குரல்கள் எழுந்து வருகின்றன. அதேபோல், திமுகவிலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தால் தான் ஆட்சி வாய்ப்பை இழந்தோம் என்றும், கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் உள்ளுக்குள் புகையத் தொடங்கியுள்ளது. இதனால் தங்களின் அரசியல் இருப்பைத் தக்க வைக்க தவெக ஆட்சியை நீட்டிக்க விடக்கூடாது என்பதில் இரு தலைமைகளும் உறுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள், வதந்திகள் குறித்து இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் தங்களது தரப்பு விளக்கங்களை அளித்துள்ளனர். அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், “தனி மெஜாரிட்டி இல்லாத ஒரு ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலையலாம் என்று பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியதற்கும், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது வெறும் வதந்தி, இதில் உண்மையில்லை” என மறுத்துள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “இது முற்றிலும் தவறான கருத்து. குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு எப்போதும் கிடையாது. இதுபோன்ற வேலைகளில் நாங்கள் எந்தக் காலத்திலும் ஈடுபட்டதில்லை” என அழுத்தமாகக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago