சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம், தற்போது தமிழகத்தின் மிக முக்கிய விவாதப் புள்ளியாக மாறியுள்ளது. வாரியத்தின் அதீத பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் மிக முக்கியமான ஆவணங்கள் மற்றும் ஹார்டு டிஸ்க்குகள் மர்மமான முறையில் திருடப்பட்டதாக எழுந்துள்ள புகார், ஒட்டுமொத்த மின்வாரிய வட்டாரத்தையும் உலுக்கியுள்ளது.
அதிர்ச்சியை ஏற்படுத்திய திருட்டுப் புகார்:
மின்வாரிய அமைச்சர் நிர்மல்குமார் சமீபத்தில் இந்த அலுவலகத்தில் அதிரடி ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த ஆய்வுக்கு அடுத்தே, அலுவலகத்தில் இருந்த முக்கியத் தரவுகள் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்செயலாக நடந்த ஒன்றா? அல்லது திட்டமிட்ட சதியா? என்ற கோணத்தில் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாயமான 18 ஹார்டு டிஸ்க்குகள்:
மின்சார வாரியத்தின் டெண்டர்கள், கொள்முதல் தொடர்பான முக்கியத் தகவல்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்க்குகள் அடியோடு திருடப்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, கடந்த காலங்களில் மின்சார வாரியம் மேற்கொண்ட நிலக்கரி கொள்முதல் தொடர்பான மிக ரகசியமான, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விவரங்கள் இந்த ஹார்டு டிஸ்க்குகளில் தான் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆறுதல் தரும் நகல்கள்
அதிர்ஷ்டவசமாக, டிஜிட்டல் தரவுகள் திருடப்பட்டிருந்தாலும், அவற்றுடன் தொடர்புடைய அச்சிடப்பட்ட ஆவணங்களின் நகல்கள் மின்சார வாரியத்தின் வசம் பத்திரமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விசாரணையின் அடுத்தகட்டத்திற்குப் பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.
அமைச்சரின் ஆய்வுக்குப் பின் இந்தச் சம்பவம் அரங்கேறியிருப்பது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மின்சார வாரியத்தின் உள்விவகாரங்களை நன்கு அறிந்தவர்களே இந்தத் துணிகரத் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர். கைரேகை நிபுணர்கள், சிசிடிவி காட்சிகளின் உதவியோடு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி 2021- 2023 வரை முதல் மின்சாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2023 – 2024 செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. 2024- 2025 வரை செந்தில் பாலாஜி சிறைவாசத்திற்குப் பிறகு மீண்டும் அமைச்சரவையில் இணைந்து, மின்சாரத் துறையைத் திரும்பப் பெற்றார்ல். 2025 – 2026 வரை திமுக ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் போக்குவரத்துத் துறையுடன் சேர்த்து மின்சாரத் துறையையும் கூடுதலாகக் கவனித்து வந்தார் எஸ். எஸ். சிவசங்கர். தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, தற்போது மின்சாரத் துறை அமைச்சராக சி.டி.ஆர். நிர்மல்குமார் பொறுப்பு வகித்து வருகிறார்.
