புதிய ஆளுங்கட்சியான தவெக பிற கட்சிகள் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது எழுப்பப்பட்டுள்ள ’50 கோடி ரூபாய்’ லஞ்சப் புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அண்மையில் புதிய முதலமைச்சர் ஜோசப் விஜயைச் சந்தித்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் புதிய ‘கிரீன் காப்பர்’ திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என வைகோ மனு அளித்திருந்தார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, வைகோ தவெக-விடம் இருந்து 50 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு ஆதரவு தருவதாகச் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டன. இதற்கு வைகோ தனது பாணியில் மிகக் காரசாரமாகவும் உருக்கமாகவும் பதிலடி கொடுத்துள்ளார்.
தனது 52 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையைக் குறிப்பிட்டுப் பேசிய வைகோ, இந்த அவதூறுகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் சதியை அம்பலப்படுத்தியுள்ளார்.
வைகோவின் ஆக்ரோஷப் பேச்சு
“பண ஆசை என்பது ஒரு சதவிகிதம் கூட இல்லாதவன் நான். அப்படிப்பட்ட என்னை, முதலமைச்சர் விஜயைப் பார்த்து 50 கோடி ரூபாய் வாங்கிவிட்டதாகக் கூறுகின்றனர். நரம்பில்லாத நாக்கு… எதை வேணாலும் பேசும்! ஆனால், இப்படி என்னை அவதூறாகப் பேச வைப்பவர்கள் யார்? இதன் பின்னணியில் இருந்து காய்நகர்த்துவது யார் என்பது 52 ஆண்டுகால நாடாளுமன்ற மற்றும் பொதுவாழ்வு அரசியலில் இருக்கும் எனக்குத் தெரியாதா என்ன? என்னால் அதனை எளிதாக யூகிக்க முடிகிறது!” என வைகோ தனது அரசியல் எதிரிகளுக்கு மிக நேரடியான எச்சரிக்கையையும் வேதனையையும் தெரிவித்துள்ளார்.
வைகோவை குறிவைப்பது யார்?
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தவெக அரசுடன் இணக்கமான அப்ரோச்சை கடைப்பிடித்து வருகின்றன. குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினரான துரை வைகோவும் விஜய்யின் அரசியல் முதிர்ச்சியைப் பாராட்டியிருந்தார். இந்தச் சூழலில், வைகோவை குறிவைத்து இத்தகைய 50 கோடி ரூபாய் அவதூறுகள் பரப்பப்படுவதற்குப் பின்னால் 2 முக்கியக் காரணங்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
திமுக கூட்டணியில் நீடிக்கும் மதிமுக, புதிய ஆளுங்கட்சியான தவெக-வை நோக்கி நகர்வதைத் தடுத்து, வைகோவின் அரசியல் நேர்மையின் மீது கறையை உண்டாக்கும் முயற்சி இது என்று மதிமுகவினர் கொந்தளிக்கின்றனர். மதிமுகவின் அடுத்தகட்ட தலைமையாக உருவெடுத்துள்ள துரை வைகோவின் அரசியல் நகர்வுகளுக்கு முட்டுக்கட்டை போடவே, வைகோவின் 50 ஆண்டுகால தியாக அரசியலைச் சிதைக்க இத்தகைய பொய்ப் பிரச்சாரங்கள் ஏவப்படுவதாகக் கூறப்படுகிறது.
முற்றுப்புள்ளி வைக்குமா மதிமுக?
கடந்த காலங்களிலும் தேர்தல் நேரங்களில் வைகோ மீது இதுபோன்ற நிதி சார்ந்த அவதூறுகள் கிளப்பப்பட்டபோது, அவர் அதனைத் தைரியமாக எதிர்கொண்டு நீதிமன்றம் வரை சென்றுள்ளார். தற்போதும், “என்னை இயக்க வைப்பவர்கள் யார் என்று எனக்குத் தெரியும்” என அவர் கூறியிருப்பது, தனக்கு எதிராகச் சதி செய்யும் அரசியல் கட்சிகளுக்கு அவர் விடுத்துள்ள மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
