திருமணம் என்பது சேவை செய்வதற்கான ஒப்பந்தம் அல்ல என்று மும்பை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. மனைவி வீட்டு வேலைகளை சரியாக செய்வதில்லை என்று கூறி விவாகரத்து பெற்ற கணவர் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
கணவரை பிரிந்து வாடும் மனைவி மேல்முறையீடு செய்த நிலையில், கணவருக்கு எதிராக நீதிபதி கடுமையான கருத்துகளை பதிவு செய்துள்ளார். சமையல் செய்வது, வீடு சுத்தம் செய்வது போன்ற வீட்டு வேலைகளை மனைவி செய்ய மறுப்பது ‘கொடுமை’ ஆகாது என்றும், திருமணம் என்பது சேவை செய்வதற்கான ஒப்பந்தம் அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், மனைவி வேலைக்காரி அல்ல எனவும் நீதிபதி தெளிவாக குறிப்பிட்டார். மனைவிக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிமன்றம், கணவர் மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
