சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண், சூளைமேடு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான எலக்ட்ரீசியன் அமீர்சுகேல் (28) என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளாக நட்பாகப் பழகி வந்ததாகவும், அவரது தவறான நடத்தை காரணமாக அந்தப் பழக்கத்தைக் கைவிட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தங்களுக்குள் இருந்த பழைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, தன்னைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்ய மிரட்டுவதாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்
முதல் கணவரை விவாகரத்து செய்திருந்த அந்தப் பெண், அமீர்சுகேலின் தொடர்பை முழுமையாகத் துண்டித்த பிறகு வேறொருவரை மறுமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இதையறிந்த அமீர்சுகேல், அந்த பெண்ணை நேரில் சந்தித்து, கணவரைப் பிரிந்து வந்து தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்தப் பெண் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஆத்திரமடைந்த அமீர்சுகேல், இருவரும் ஒன்றாக இருந்தபோதே எடுத்த சில தனிப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அச்சுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, விழுப்புரம் பவுஞ்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த அமீர்சுகேலை சூளைமேடு போலீசார் கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், புகைப்படங்கள் வைத்திருந்த அவரது செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
