https://republictn.com/

முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விஜய் தொடர்பான விவாகரத்து வழக்கு, நாளை மீண்டும் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

தமிழகத்தின் முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய்க்கு எதிராக, அவரது மனைவி சங்கீதா விஜய் செங்கல்பட்டு மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை தற்போது மூன்றாவது முறையாக நடைபெற உள்ளது.

விஜய் மற்றும் சங்கீதா ஆகியோருக்கு 1998ஆம் ஆண்டு லண்டனில் பதிவுத் திருமணமும், 1999ஆம் ஆண்டு சென்னையில் இந்து முறைப்படி திருமணமும் நடைபெற்றது. கடந்த 25 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த இந்தத் தம்பதியருக்கு ஜோசப் ஜேசன் விஜய் சஞ்சய் மற்றும் திவ்யா ஷாஷா ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

தங்களது குடும்ப வாழ்க்கை ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு முதல் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகத் தொடங்கியதாக சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2021 ஏப்ரல் மாதம் முதல் விஜய் ஒரு நடிகையுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததே குடும்பப் பிரிவுக்கு முக்கிய காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தனக்கு மிகுந்த மனஉளைச்சலையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியதோடு, பொதுவெளியில் அவமானத்திற்கும் ஆளாக்கியதாக சங்கீதா தனது மனுவில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அந்த நடிகை சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகள் தன்னையும் தனது பிள்ளைகளையும் பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2021ஆம் ஆண்டு முதல் விஜய் தன்னை உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும் புறக்கணித்து வருவதாகவும், தற்போது ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தங்களது திருமணத்தை சட்டப்படி ரத்து செய்ய வேண்டும் என்றும், தனக்கு நிரந்தர ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் சங்கீதா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை தற்போது வசித்து வரும் இல்லத்தில் தொடர்ந்து தங்கியிருக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

இதனிடையே, நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், இந்த வழக்கு அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த மனு கடந்த மாதம் 19ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, அடுத்த கட்ட விசாரணை நாளை நடைபெறும் என அறிவித்திருந்தார். அதன்படி, இந்த விவாகரத்து வழக்கு மீதான விசாரணை நாளை செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago