நீட் மறுதேர்வை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் டெலிகிராம் செய்தி பரிமாற்ற செயலி தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதால், டெலிகிராம் செயலி இந்தியாவில் மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளது.
நீட் மறுதேர்வு காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு நாடு முழுவதும் டெலிகிராம் செய்தி பரிமாற்ற தளத்தின் சேவையை தற்காலிகமாக முடக்கியிருந்தது. இந்நிலையில், இன்று முதல் அந்தச் சேவை மீண்டும் நாடு முழுவதும் செயல்படத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், டெலிகிராமில் உள்ள செய்திகளைத் திருத்தும் (Edit) அம்சம் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும், அது ஜூன் 30ஆம் தேதிக்குப் பிறகே மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக டெலிகிராம் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இதுபோன்ற நெருக்கடி காலங்களில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் செயலிகளை தற்காலிகமாக முடக்கி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், டெலிகிராம் சேவையை இடைக்காலமாக முடக்கிய நடவடிக்கை சட்டபூர்வமானது என்றும் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நீட் மறுதேர்வு நேற்று நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, டெலிகிராம் செயலி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
