https://republictn.com/

பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான கௌதமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமான அதிமுகவில் இருந்து விலகியுள்ளார்.

இதுதொடர்பாக, 2026 ஜூன் 14ஆம் தேதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கௌதமியின் இந்த திடீர் முடிவு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது விலகல் குறித்து சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள கௌதமி, “தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டும், சமூக சேவைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் நோக்கிலும், கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

கௌதமி, 1997ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) செயல்பட்டு வந்தார். பின்னர், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் இணைந்த பிறகு, தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக பங்கேற்று கட்சிக்காக பணியாற்றிய அவர், அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பையும் வகித்து வந்தார்.

இந்நிலையில், சமீபகாலமாக அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி வரும் சூழலில், கௌதமியின் இந்த திடீர் விலகலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு மேலும் ஒரு சவாலாக பார்க்கப்படுகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago