Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்ச்சிகள், அமைதிப் பேரணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் #KalaignarForever (என்றும் கலைஞர்) என்ற ஹேஷ்டேக்குடன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்தப் பதிவில், “அவர் நமக்கு எல்லாமாய் இருக்கிறார்; அவர் இல்லாமல் நாம் யாருமில்லை” என்று குறிப்பிட்டு, தனது தந்தையும் அரசியல் வழிகாட்டியுமான கலைஞர் கருணாநிதிக்கு உணர்வுபூர்வமான புகழஞ்சலி செலுத்தினார்.


Republic Tamil

மேலும், “தலைவர் கலைஞர் உடல் ரீதியாக நம்மிடம் இல்லை என்றாலும், அவர் நம் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கருப்புக் கண்ணாடியும், அந்த கம்பீரமான குரலும் எப்போதும் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும்” என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

கலைஞர், எண்பது ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வில் மக்களுக்காக பணியாற்றியவர் என்றும், அரை நூற்றாண்டுக்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்திய தலைவர் என்றும், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், பதின்மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் என்றும் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்க  அண்ணா அறிவாலயத்தில் அதிரடி என்ட்ரி கொடுத்த அலிம் அல் புகாரி… திமுகவில் இணைந்து பரபரப்பு

அரசியலைத் தாண்டி இலக்கியம், சினிமா, தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் திராவிட இயக்கம் உள்ளிட்ட பொதுவாழ்வின் அனைத்து துறைகளிலும் தனித்துவமான தடம் பதித்து, தமிழ் அடையாளத்தின் நிரந்தரச் சின்னமாக கலைஞர் விளங்குகிறார் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை பிரம்மாண்ட அமைதிப் பேரணி நடைபெற்றது.

ஓமந்தூரார் அரசு தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கலைஞரின் சிலை அருகில் இருந்து தொடங்கிய இந்த அமைதிப் பேரணி, அண்ணா சாலை வழியாக காமராஜர் சாலையை அடைந்து, மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை சென்றடைந்தது.

இந்த அமைதிப் பேரணியில் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு மௌனமாக அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படியுங்க  "மறுதேர்வு சவாலை முறியடித்து, சோஷியல் மீடியாவை ஓரங்கட்டி, நீட்டில் 700 மார்க் குவித்த புதுக்கோட்டை ஸ்ரீனிகா!"

கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், அதே வளாகத்தில் அமைந்துள்ள திமுக நிறுவனர் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.

Republic Tamil

நினைவேந்தல் நிகழ்ச்சிகளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அமைதிப் பேரணிகள், இரத்ததான முகாம்கள், மரக்கன்று நடும் நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமூகநலப் பணிகளும் திமுகவின் பல்வேறு அணிகள் சார்பில் நடத்தப்பட்டன.

குறிப்பாக, திமுக மாற்றுத்திறனாளிகள் அணி சார்பில் மாநிலம் முழுவதும் நினைவேந்தல் நிகழ்ச்சிகளும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.

நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். அங்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்து, தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் மு.க.ஸ்டாலின் நிகழ்வில் உரையாற்றியபோது, தனது உரையை “உள்ளத்தில் அழியாத ஓவியமாய் நிறைந்திருக்கும் என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கு வணக்கம்” என்று தொடங்கினார்.

இதையும் படியுங்க  கொளத்தூர் வழக்கில் அதிரடி திருப்பம்! ஸ்டாலினுக்கு புதிய நெருக்கடி
Republic Tamil

தொடர்ந்து அவர், “நான் பெரியாரால் உருவாக்கப்பட்டவன்; அறிஞர் அண்ணாவால் செம்மைப்படுத்தப்பட்டவன்; என்னை வளர்த்தெடுத்தவர்கள் என் கழக உடன்பிறப்புகள். நான் சீமான் வீட்டு பிள்ளை அல்ல; சாமானியர் வீட்டு பிள்ளை என்று சொன்னவர் தலைவர் கலைஞர். அவரது ஆட்சியே சாமானிய மக்களுக்கான ஆட்சியாக இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என்றென்றும் ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை மையமாகக் கொண்ட ஆட்சியாகவே இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும், “ஒடுக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கான அரசை உருவாக்கியவர் கலைஞர். கன்னியாகுமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை தமிழ்நாட்டின் எந்தப் பகுதியும் அவரது காலடி படாத இடமில்லை. அவர் சந்திக்காத மக்களும் இல்லை; தொடங்காத மக்கள் நலத் திட்டங்களும் இல்லை; அவர் மீது பாசம் கொள்ளாத உடன்பிறப்புகளும் இல்லை” என்று அவர் நினைவு கூர்ந்தார்.

இறுதியாக, “தமிழகத்தின் தலைவர் கலைஞர் புகழ் வாழ்க… முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் புகழ் வாழ்க… நம்மை ஆளாக்கிய திராவிடப் போராளி கலைஞர் புகழ் வாழ்க…” என்று முழக்கமிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 days ago at 7 days ago