நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்ததால், ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவரின் தலை மற்றும் தோள்பகுதி விமானத்திற்கு வெளியே இழுக்கப்பட்ட நிலையில், அவர் அணிந்திருந்த சீட் பெல்ட்டும், சக பயணிகளின் துரித நடவடிக்கையும் காரணமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ரயான்ஏர் (Ryanair) நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 விமானத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
கிரீஸ் நாட்டின் தெசலோனிகி (Thessaloniki) நகரிலிருந்து ஜெர்மனியின் மெம்மிங்கன் (Memmingen) நகரை நோக்கி 185 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதன் வலது புற என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு சிறிய உலோகத் துண்டு உடைந்து, அதிவேகமாக பறந்து வந்து விமானத்தின் ஜன்னல் கண்ணாடியை மோதி உடைத்ததாக கூறப்படுகிறது.
ஜன்னல் உடைந்த உடனேயே ஏற்பட்ட கடுமையான காற்றழுத்த வேறுபாடு (Decompression) காரணமாக, ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த 61 வயதான செர்பிய நாட்டைச் சேர்ந்த பயணி, தலை மற்றும் தோள்பகுதி வெளியே இழுக்கப்பட்டார்.
அந்த நேரத்தில் அவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால், அவரது உடல் முழுமையாக விமானத்திற்கு வெளியே தூக்கி எறியப்படாமல், இருக்கையுடன் இணைக்கப்பட்டிருந்த சீட் பெல்ட் அவரை தடுத்து நிறுத்தியது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவியும், அருகில் இருந்த சக பயணிகளும் உடனடியாக ஓடிவந்து, வெளியே தொங்கியிருந்த அவரது கால்கள் மற்றும் உடலை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, சுமார் ஐந்து நிமிடங்கள் போராடிய பின்னர் அவரை மீண்டும் விமானத்திற்குள் பாதுகாப்பாக இழுத்து காப்பாற்றினர்.
இதையடுத்து, விமானத்தில் இருந்த ஆக்சிஜன் முகமூடிகள் (Oxygen Masks) தானாகவே கீழிறங்கின. விமானிகள் மிகுந்த சாதுரியத்துடன் செயல்பட்டு, விமானத்தை உடனடியாக மீண்டும் கிரீஸுக்குத் திருப்பி, அவசரமாகவும் பாதுகாப்பாகவும் தரையிறக்கினர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பயணிக்கு கழுத்து, தோள்பட்டை மற்றும் உராய்வுக் காயங்கள் (Friction Burns) ஏற்பட்டன. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானப் பயணங்களின்போது அல்லது அவசரச் சூழ்நிலைகளில் சீட் பெல்ட் அணிவது எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
