அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் மோதல் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதல் ஒரு கட்டத்தில் அணு ஆயுதப் போராக மாறும் அபாயம் ஏற்பட்டதாகவும், தனது தலையீட்டால் அந்தப் போர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், உலகம் முழுவதும் இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும், அதனால் அமைதிக்கான நோபல் பரிசு தனக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது 11 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், அந்த விமானங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை, அல்லது இரு நாடுகளின் மொத்த இழப்பா, இல்லையெனில் ஒரு நாட்டின் இழப்பா என்பது குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
மேலும், இந்த மோதல் அணு ஆயுதப் போராக மாறாமல் தடுக்கப்பட்டதன் மூலம் சுமார் 3 முதல் 5 கோடி மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும், அதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னை நேரில் பாராட்டியதாகவும் டிரம்ப் கூறினார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலைத் தானே நிறுத்தியதாக டிரம்ப் பலமுறை கூறி வந்தாலும், அந்தக் கூற்றை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவோ அல்லது வேறு எந்த மூன்றாவது நாடோ மத்தியஸ்தம் செய்யவில்லை என்றும், இரு நாடுகளின் ராணுவ தளபதிகள் இடையேயான உயர்மட்ட நேரடிப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில்தான் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது என்றும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, கடந்த ஆண்டு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட அந்த நடவடிக்கையில், பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்கள் உட்பட ஆறு ராணுவ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அல்லது சேதமடைந்ததாக இந்தியா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் மோதல் குறித்த டிரம்பின் சமீபத்திய கருத்துகள் மீண்டும் சர்வதேச அளவில் பரபரப்பையும் அரசியல் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
