https://republictn.com/

2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில், போர்ச்சுகல் அணி குரோஷியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில், 41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, 68-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி போர்ச்சுகல் அணியை சமநிலைக்குக் கொண்டு வந்தார். உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் அவர் அடித்த முதல் கோல் இதுவாகும்.

டொராண்டோ மைதானத்தில் கோல் அடித்த பிறகு, தனது வழக்கமான ‘Siuuu’ கொண்டாட்ட பாணியில் ரொனால்டோ மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபோது, மைதானம் முழுவதும் ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது.

போட்டியின் 94-வது நிமிடத்தில் மாற்று வீரர் கொன்சலோ ராமோஸ் அடித்த அதிரடி ஹெட்டர் கோல் போர்ச்சுகலுக்கு வெற்றியை உறுதி செய்தது. கடைசி நிமிடத்தில் குரோஷியா அடித்த கோல், VAR பரிசோதனையில் ஆஃப்சைடு என அறிவிக்கப்பட்டதால் நிராகரிக்கப்பட்டது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, போர்ச்சுகல் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு, ரொனால்டோவின் பெயரை முழக்கமிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்த ரொனால்டோ மற்றும் போர்ச்சுகல் வீரர்கள், ஹோட்டல் பால்கனிக்கு வந்து ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்து, அவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர்.

போர்ச்சுகல் அணியின் இந்த வெற்றியைக் கொண்டாட இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ரசிகர்கள் நள்ளிரவில் வீதிகளில் திரண்டு, பட்டாசுகள் வெடித்தும், தேசியக் கொடிகளை அசைத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

2026 உலகக் கோப்பையுடன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ரொனால்டோ ஏற்கனவே அறிவித்துள்ளதால், அவரது ‘லாஸ்ட் டான்ஸ்’ எனக் கருதப்படும் இந்த நாக்-அவுட் வெற்றியை ரசிகர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் கொண்டாடி வருகின்றனர்.

இதனையடுத்து, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் போர்ச்சுகல் அணி ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago