கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தியாகதுருகம் அருகே உள்ள முடியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகன் சந்துரு, எட்டாம் வகுப்பு படித்து வந்தார். சந்துரு உளுந்தூர்பேட்டை அடுத்த திருப்பெயர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாலை நேரத்தில் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் சந்துரு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
இதையடுத்து, நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டும் சந்துருவை காப்பாற்ற முடியவில்லை.
தகவலறிந்து வந்த ஏடைக்கல் காவல் துறையினர் சம்பவ இடத்திலிருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
