சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த கோமதி (31), ராமாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இன்று காலை வேலைக்குச் செல்லுவதற்காக அவர் ரேபிடோ (Rapido) பைக் டாக்ஸியில் புறப்பட்டுள்ளார். தாம்பரம் பைபாஸ் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வானகரம் அருகே அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று பைக் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த கோர விபத்தில் கோமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பைக் டாக்ஸி ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் இரவு மற்றும் அதிகாலை நேர பயணங்களில் பைக் டாக்ஸி சேவைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை இந்த சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
