https://republictn.com/

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளராக ஆர். சாந்தி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதல் பெண் சட்டப்பேரவைச் செயலாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சட்டப்பேரவைச் செயலாளராகப் பணியாற்றி வந்த கி. சீனிவாசன், தனது பணி நீட்டிப்புக் காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே அண்மையில் பதவி விலகினார். இதையடுத்து, மூப்புரிமை அடிப்படையில் ஆர். சாந்தி புதிய சட்டப்பேரவைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டார்.

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் அவர் பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டார். தமிழக சட்டமன்றம் தொடங்கப்பட்ட வரலாற்றில் இதுவரை எந்தப் பெண்ணும் சட்டப்பேரவைச் செயலாளர் பதவியை வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆர். சாந்தியின் நியமனம் தமிழக நிர்வாக வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. அண்மையில் சட்டத்துறைச் செயலாளராக பெண் அதிகாரியான பி. சுமதி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சட்டப்பேரவைச் செயலாளராகவும் ஒரு பெண் அதிகாரி பொறுப்பேற்றிருப்பது, நிர்வாகத் துறையில் பெண்களின் பங்களிப்பும் தலைமைத்துவமும் மேலும் வலுப்பெற்று வருவதை எடுத்துக்காட்டுவதாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் முதல் பெண் சட்டப்பேரவைச் செயலாளராக ஆர். சாந்தி பொறுப்பேற்றுள்ள இந்த நிகழ்வு, மாநில நிர்வாக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பதிவாகியுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago