வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக, தனது 96-வது வயதில் கோவையில் காலமான கவிஞர் புவியரசு அவர்களின் மறைவுக்கு, முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், கவிஞர் புவியரசு அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும், தமிழ்த் துறைக்கும் இலக்கிய உலகிற்கும் அவர் ஆற்றிய அரிய பணியைப் போற்றும் வகையில், அவரது இறுதிப் பயணத்தின்போது தமிழக அரசின் சார்பில் முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கவிஞர் புவியரசு, 2007-ஆம் ஆண்டு ‘புரட்சிக்காரன்’ என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காகவும், 2009-ஆம் ஆண்டு ‘கையொப்பம்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காகவும் இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற பெருமைக்குரியவர்.
தமிழில் மரபுக் கவிதையிலிருந்து புதுக்கவிதை வடிவத்தை நோக்கி நகர்த்திய புகழ்பெற்ற ‘வானம்பாடி கவிதை இயக்கத்தை’ தோற்றுவித்த முக்கிய ஆளுமைகளில் ஒருவராகவும் அவர் விளங்கினார்.
மேலும், நடிகர் கமல்ஹாசன் அவர்களின் ‘மையம்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றியதுடன், அவரது புகழ்பெற்ற திரைப்படங்களான ‘மகாநதி’ மற்றும் ‘விருமாண்டி’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதுவதிலும், ‘மருதநாயகம்’ திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய கவிஞர் புவியரசு, ஷேக்ஸ்பியர் மற்றும் கலீல் கிப்ரான் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் பல நூல்களை தமிழில் மொழிபெயர்த்து இலக்கிய உலகிற்கு அரிய பங்களிப்பைச் செய்துள்ளார்.
கவிஞர் புவியரசு அவர்களின் இறுதிச் சடங்குகள் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரிக்கால் எரியூட்டு மயானத்தில் நடைபெறுகின்றன.
