திருநெல்வேலியில் வாகன அனுமதிக்காக பெண் RTO அதிகாரியின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு கூகுள் பே மூலம் ரூ.20,000 அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத வகையில் வந்த பணத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட நபருக்கே திருப்பி அனுப்பியதுடன், தன்னை வேண்டுமென்றே லஞ்சப் புகாரில் சிக்க வைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகக் கூறி அந்த அதிகாரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் RTO அதிகாரியாக செல்வி பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகத்தில் வாகன உரிமம், பதிவு மாற்றம், வாகன அனுமதி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், கேரள மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு பின்னர் திருநெல்வேலிக்கு பதிவு மாற்றம் செய்யப்பட்ட ஒரு மினி பேருந்தின் குறிப்பிட்ட சில பாகங்களை மாற்றுவதற்கான அனுமதி கோரி பால் என்பவர் விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அந்த வாகனத்திற்கான அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறி, பால் என்பவர் RTO அதிகாரி செல்வியின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு கூகுள் பே மூலம் ரூ.20,000 அனுப்பியதாக தெரிகிறது.
எதிர்பாராத விதமாக தனது வங்கிக் கணக்கிற்கு ரூ.20,000 பணம் வந்ததை அறிந்த RTO அதிகாரி செல்வி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, பணம் அனுப்பிய செல்போன் எண்ணை தொடர்புகொண்டு அவர் விசாரித்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, மினி பேருந்தின் பாகங்களை மாற்றுவதற்கான அனுமதி வழங்குவதற்காகவே அந்தப் பணம் அனுப்பப்பட்டதாகத் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அதிகாரி, தனது கணக்கிற்கு வந்த ரூ.20,000 பணத்தையும் உடனடியாக சம்பந்தப்பட்ட நபருக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.
மேலும், “யார் நீங்கள்? எதற்காக எனக்கு பணம் அனுப்புகிறீர்கள்?” எனக் கேட்டு, பணம் அனுப்பிய நபரை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, தன்னை வேண்டுமென்றே லஞ்சப் புகாரில் சிக்க வைப்பதற்காக சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த RTO அதிகாரி செல்வி, உடனடியாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட மாநகர காவல் ஆணையாளர், இந்த விவகாரம் குறித்து நேரடியாக விசாரணை நடத்த துணை ஆணையாளர் அன்சுல் நாகருக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், பெருமாள்புரம் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது.
தன்னை லஞ்ச வழக்கில் சிக்க வைக்கும் நோக்கத்துடன் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி, பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்க திட்டமிடப்பட்டதாக அதிகாரி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நேர்மையான அரசு அதிகாரிகளை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் லஞ்ச வழக்குகளில் சிக்க வைக்க முயற்சி செய்யப்பட்டதா? இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரத்தில், இந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மை, பணம் அனுப்பிய நபரின் நோக்கம் மற்றும் அதிகாரி கூறும் சதித் திட்டக் குற்றச்சாட்டின் பின்னணி ஆகியவை விசாரணையின் முடிவிலேயே முழுமையாக தெரியவரும்.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை பயன்படுத்தி அரசு அதிகாரியை லஞ்ச வழக்கில் சிக்க வைக்க முயற்சி செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையினரும், லஞ்ச ஒழிப்புத்துறையினரும் உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
