https://republictn.com/

அதிமுக சட்டமன்ற கொறடா நியமனம் தொடர்பாக, இரு அணிகளும் தொடர்ந்து மனு அளித்து வருவதாகவும், அவை தற்போது ஆய்வில் உள்ளதாகவும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், சி.வி. சண்முகம் தலைமையிலான அணியைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக வாக்களித்தனர். அதே நேரத்தில், எடப்பாடி கே. பழனிசாமி தரப்பைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் எதிராக வாக்களித்தனர்.

இதனையடுத்து, அதிமுகவின் 47 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டு தன்னை சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் கடிதம் வழங்கினார்.

ஆனால், அந்தக் கடிதம் போலியானது என குற்றம்சாட்டிய சி.வி. சண்முகம் அணி, அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தங்களிடம் இருப்பதாகவும், எனவே தங்கள் தரப்பிலிருந்தே கொறடா தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் சபாநாயகரிடம் மனு அளித்தது.

மூன்றாவது முறையாக சபாநாயகரை சந்தித்த அந்த அணியினர், கொறடா விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், இரு அணிகளின் மனுக்களும் ஆய்வில் உள்ளதாகவும், சட்டப்படி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஆளுநர் மாளிகையில் மனு அளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர், சி.வி. சண்முகம் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த அணியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறதுப்இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்த இன்பதுரை எம்.பி., “1993ஆம் ஆண்டு குதிரைப் பேரம் தொடர்பாக அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் மற்றும் பூட்டா சிங் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது போல, முதலமைச்சர் ஜோசப் விஜய் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதற்கிடையில், நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரின் படங்களை கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதேபோல், சேலத்தில் “பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டும்” என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணியை கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனிடையே, கட்சிப் பதவிகள் நீக்கம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அவர்களின் கட்சிப் பொறுப்பையும் நீக்கியிருந்தார்.

இதையடுத்து, “நான் என்ன தவறு செய்தேன்?” என கேள்வி எழுப்பிய பெஞ்சமின், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 weeks ago at 4 weeks ago