https://republictn.com/

திமுக கூட்டணியில் நீடித்து வந்த தோழமைக் கட்சிகள் பலவும், விஜய்யின் தவெக நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்நிலையில் மதிமுகவிற்குள் எழுந்துள்ள உள்ளக் குமுறல், அக்கட்சித் தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்த சில முக்கிய கட்சிகள் ஒவ்வொன்றாக அங்கிருந்து வெளியேறி, விஜய்யின் தவெக பக்கமாக தங்களது ஆதரவை திருப்பத் தொடங்கியுள்ளன. மதிமுகவும் தவெக-வோடு கைகோர்க்கப் போவது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. கட்சியின் இந்த புதிய அரசியல் நகர்வு ஒருபுறம் இருக்க, மறுபுறம் கட்சியின் இரு எம்.எல்.ஏ-க்களால் புதிய மல்லுக்கட்டு ஒன்று தொடங்கியுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவின் இரண்டு எம்.எல்.ஏ-க்கள திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தற்போது மதிமுக தலைமை தவெக பக்கம் மாற முடிவெடுத்துள்ளதால், திமுக சின்னத்தில் வென்ற இந்த இரு எம்.எல்.ஏ-க்களையும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யுமாறு அக்கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

அவர்கள் ராஜினாமா செய்யும் பட்சத்தில், அந்தத் தொகுதிகளுக்கு வரும் இடைத்தேர்தலில் தவெக கூட்டணியோடு இணைந்து போட்டியிட்டு மீண்டும் வென்றுவிடலாம் என்பது மதிமுக தலைமையின் கணக்காக இருக்கிறது. ஆனால், தாயகத்தின் இந்தக் கணக்குக்கு அந்த இரு எம்.எல்.ஏ-க்களும் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். “பதவியை ராஜினாமா செய்ய முடியாது” என அவர்கள் இருவரும் கட்சித் தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருவேளை ராஜினாமா செய்ய வற்புறுத்தினால், அவர்கள் இருவரும் திமுக பக்கமே நிரந்தரமாகச் சென்றுவிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாகப் பேசப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்கள் அந்த எம்.எல்.ஏ-க்களிடம், “கட்சித் தலைமையின் உத்தரவின்படி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறீர்களா?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள், பொதுவாக அரசியல்வாதிகள் கூறும் “கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்” என்ற வழக்கமான வசனத்தைக் கூறவில்லை.

அதற்குப் பதிலாக, “அதை எங்கள் தலைவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்” என்று ஒற்றை வார்த்தையில் மழுப்பலாகப் பதிலளித்துவிட்டுச் சென்றுள்ளனர். அவர்களின் இந்தத் தொனி, கட்சித் தலைமையின் மீதான தங்களது அதிருப்தியையும், ராஜினாமா செய்ய அவர்கள் தயாராக இல்லை என்பதையும் அப்பட்டமாக உறுதிப்படுத்துவதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago