காரைக்காலில் தந்தையை பராமரிக்கத் தவறிய மூன்று மகன்களுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவர், தனது மகன்கள் தன்னை பராமரிக்காமல் தவிக்க விட்டதாகக் கூறி, காரைக்கால் சார்பு நீதிமன்றத்தின் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த அப்போதைய சார்பு நீதிபதி ஆதர்ஷ், முனுசாமியின் மகன்களான வரதராஜன், மீனாட்சிசுந்தரம் மற்றும் திருமுருகன் ஆகிய மூவரும் தங்களது தந்தைக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மூவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி தனக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படவில்லை எனக் கூறி முனுசாமி மீண்டும் சார்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சார்பு நீதிபதி செல்வி பூஜா, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறிய முனுசாமியின் மூன்று மகன்களுக்கும் தலா ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், தங்களது தந்தைக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான தலா ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்தை முழுமையாகச் செலுத்தும் வரை அவர்கள் சிறையிலேயே இருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன், அவர்களை ஐந்து நாட்கள் சிறைக் காவலில் வைக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, மூவரும் காரைக்கால் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
