தற்போது எடப்பாடி பழனிசாமி – எஸ்.பி.வேலுமணி தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. தவெகவிற்கு ஆதரவு அளித்தால் கட்சி தாவல் தடை சட்டம் பாயும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின்படி, ஒரு கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், அக்கட்சியின் கொறடா உத்தரவை மீறிச் செயல்பட்டாலோ அல்லது தானாக முன்வந்து கட்சியின் உறுப்பினர் பதவியைத் துறந்தாலோ அவரது பதவி பறிக்கப்படும். தற்போது அதிமுகவில் நிலவும் அதிகாரப் போட்டியில், எடப்பாடி பழனிசாமி தரப்பு தனது பிடியைத் தளர்த்தாமல் இருக்க இந்தச் சட்டத்தையே ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.

கடந்த காலங்களில் அதிமுக இதுபோன்ற பல சவால்களைச் சந்தித்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களை அப்போதைய சபாநாயகர் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்தார். இது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிலைக்க முக்கியக் காரணமாக அமைந்தது. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் இணைந்தபோதும், பிரிந்தபோதும் கொறடா உத்தரவுகளும், நீதிமன்ற வழக்குகளுமே கட்சியின் அதிகாரத்தை நிலைநாட்டின.
2026 தேர்தலை முன்னிட்டு, அதிமுகவில் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் தவெக போன்ற புதிய சக்திகளுடன் கூட்டணி அமைக்கவோ அல்லது ஆதரவு நிலையை எடுக்கவோ விரும்புவதாகத் தகவல்கள் கசிகின்றன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எஸ்.பி. வேலுமணி தரப்பு மாற்று யோசனைகளை முன்வைப்பதாகக் கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ஒருவேளை எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் தன்னிச்சையாக முடிவெடுத்தால், மீண்டும் 2017 போன்ற தகுதி நீக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதே இ.பி.எஸ் தரப்பின் மறைமுக எச்சரிக்கை. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், கட்சியின் பொதுச்செயலாளர், கொறடாவின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும். இந்தச் சட்ட ரீதியான சிக்கலைச் சுட்டிக்காட்டுவதன் மூலம், கட்சி உடைவதைத் தடுக்கவும், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் ஒழுக்கத்தையும் பேண இ.பி.எஸ் தரப்பு முயற்சிக்கிறது. ஆனால், பெருமாலான எம்.எல்.ஏ-க்கள் எஸ்.பி.வேலுமணி தரப்பிடம் இருப்பதால் எடப்பாடி பழனிசாமியின் கட்சி தாவல் தடைச் சட்டத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் பயன்படுத்த முடியாது” என்கிறார்கள்.
