https://republictn.com/

புதுச்சேரி-தமிழக எல்லையோரப் பகுதிகளில் நிலவி வரும் சமுதாயப் பதற்றம், அரசியல் அத்துமீறல்களைக் கண்டித்து, மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் நடைபெற்ற அதிரடிப் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சினையின் பின்னணி என்ன?
நாவூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது, காளியாட்டம், கரகம் எடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு, ஒரு குறிப்பிட்ட மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவாளர்கள்), முக்குலத்தோர் சமுதாய மக்கள் பெருவாரியாக வாழும் தெருக்கள் வழியாகவே தங்களது ஊர்வலத்தைக் கொண்டு செல்வோம் எனப் பிடிவாதம் பிடித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

அப்போது, சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் சமுதாய முக்கியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, “இதுவே கடைசி முறை இனிவரும் ஆண்டுகளில் இந்த வழக்கமில்லாத பாதையைப் பயன்படுத்தக் கூடாது” என்ற நிபந்தனையுடன் ஒருமுறை மட்டும் அனுமதித்தனர்.

தவெக ஆட்சியில் நாங்களே ராஜா- விசிக
ஆனால், இந்த ஆண்டும் அதே பாதையில் ஊர்வலம் செல்ல விசிக-வினர் முயன்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. “தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க கூட்டணி அரசு அமைந்துள்ளது. எங்களுக்கு இரண்டு எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர், அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளோம்; எனவே இது விடுதலைச் சிறுத்தைகளின் ஆட்சி, எங்களை யாரும் தடுக்க முடியாது” என்று கூறி விசிகவினர் அத்துமீறுவதாக உள்ளூர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்களை விசிகவினர் அவதூறாகப் பேசுவதாகவும், அதைத் தட்டிக்கேட்கும் இளைஞர்கள் மீது திட்டமிட்டு பி.சி.ஆர் சட்டத்தின் கீழ் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாயத்தையும், அமைதியையும் மட்டுமே நம்பி வாழும் தங்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கூறி, தாய்மார்களும் பொதுமக்களும் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினர்.

போலீசாரின் தடைகளையும், பேரிகேடுகளையும் உடைத்தெறிந்து களம் காண்பதில் பெயர்பெற்ற மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக உடனடியாகக் களத்தில் இறங்கினார். காவல்துறையினர் அமைத்திருந்த பாதுகாப்பு வளையங்களை மீறி, மக்களின் உரிமைகளுக்காக அவர் அதிரடியாகச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

முக்கியக் கோரிக்கைகள்
மாற்றுப் பாதைகள் இருந்தும், வீம்புகாக எங்கள் பகுதிக்குள் ஊர்வலம் நுழைவதை இனி எப்போதும் அனுமதிக்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தி, கடைசி நேரத்தில் விடுப்பு எடுத்துவிட்டுச் சென்ற ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாய இளைஞர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட அனைத்துப் பொய் வழக்குகளையும் ரத்து செய்து, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என போராட்டக் களத்திலிருந்து ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் கிராம மக்கள் முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகளை வைத்துள்ளனர்..

முதல்வருக்கு கோரிக்கை
“பொதுமக்கள் அனைவரும் சாதி, மத வேறுபாடின்றித்தான் இந்த ஆட்சிக்கு வாக்களித்தார்கள். ஆனால், கூட்டணியில் உள்ளவர்களின் இந்த அட்டகாசம் முதலமைச்சருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை” என மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். சமுதாயங்களுக்கு இடையே தேவையற்ற மோதல்களை உருவாக்கி, வன்முறையைத் தூண்டும் விசிக-வினரின் இத்தகைய செயல்பாடுகளுக்கு முதலமைச்சர் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஸ்ரீதர் வாண்டையார் தரப்பில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

முன்னணி ஊடகங்களில் 7 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC தமிழ்நாடு" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago