திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக குவிந்தனர்.
இதனால், கோயிலில் இலவசப் பொது தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சுமார் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை காத்திருந்ததாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இலவச தரிசனத்துக்காக வந்த பெண் பக்தர் ஒருவர், தாங்கள் நீண்ட நேரமாக காத்திருப்பதாகவும், ₹100 கட்டண தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யும் நிலையில், இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் மட்டும் ஏன் இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
“பௌர்ணமி நாளில் அதிகளவில் கூட்டம் வரும் என்பது தெரிந்திருந்தும், அதற்கேற்ற வகையில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். எவ்வளவு நேரம்தான் பக்தர்களை ஒரே இடத்தில் அடைத்து வைப்பீர்கள்? நாங்கள் ஐந்து மணி நேரமாக ஒரே இடத்தில் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று அந்தப் பெண் பக்தர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதால் மிகவும் சிரமப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“நான்கு மணி நேரமாக காத்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் முருகனைப் பார்க்க முடியவில்லை. பணம் கொடுத்தவர்கள்தான் விரைவாக தரிசனம் செய்ய முடிகிறது. இலவச தரிசனத்துக்கு வரும் அப்பாவி மக்கள் மட்டும் மயக்கம் வரும் அளவுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டுமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு பெண் பக்தர் கூறுகையில், “ஐந்து மணி நேரமாக உள்ளே வந்து வரிசையில் நிற்கிறோம். குழந்தைகளை அழைத்து வந்தவர்கள் என்ன செய்வார்கள்? வயதானவர்கள் என்ன செய்வார்கள்? இயற்கை உபாதை ஏற்பட்டால் அவர்கள் எங்கு செல்வார்கள்?” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், அதற்கேற்ற வகையில் குடிநீர், கழிப்பறை மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், “பௌர்ணமி நாளில் ₹100 தரிசனத்துக்கான டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை வரையறுக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உள்ளிட்ட பொதுத் தரிசன பக்தர்கள் ஐந்து மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்படக்கூடாது” என்றும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, பௌர்ணமியை முன்னிட்டு காலையிலேயே அதிகளவில் பக்தர்கள் குவிந்த நிலையில், கட்டண தரிசனத்திற்காக ₹100 மற்றும் ₹1,000 உள்ளிட்ட கட்டண டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இலவச தரிசனத்திற்காக வந்த பக்தர்களும், கட்டண தரிசனத்திற்காக வந்த பக்தர்களும் நீண்ட நேரம் காத்திருக்காமல் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், இலவச தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் தங்களது குறைகளைப் பதிவு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், சீரான தரிசன ஏற்பாடுகளையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
