நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெக 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையை நூலிழையில் இழந்தது. இதில் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ததால் 107 ஆக குறைந்தது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களுடன் 112 ஆக பலம் இருந்தது. இதனால், தவெக தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லை என்று தொடக்கத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பெரும்பான்மைக்கு மேலும் 6 இடங்கள் குறைவாக இருந்த சூழலில், தமிழகத்தில் புதிய ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியன் முஸ்லீம் லீக், இடதுசாரி கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க தங்களின் ஆதரவை வெளியிலிருந்து வழங்க முன்வந்தன. பின்னர் இந்தியன் முஸ்லீம் லீக், விசிக கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றன.
இந்நிலையில், தவெக- விசிக இடையேயான உறவுமுறை, அமைச்சரவையில் பங்கேற்றதற்கான காரணம் குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் பல கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”தவெக தரப்பில் எழுந்த சந்தேகங்களைப் போக்குவதற்காகவே நாங்கள் அமைச்சரவையில் இடம் பெற்றோம். இடதுசாரிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் அமைச்சரவைக்கு வெளியில் இருந்தால், எந்த நேரத்திலும் ஆட்சிக்கு ஆதரவைத் திரும்பப் பெறக்கூடும் என்ற அச்சமும், சந்தேகமும் அவர்களுக்கு இருந்தது. அந்த சந்தேகத்தை நீக்கவே நாங்கள் அமைச்சரவையில் இணைந்தோம். ஆட்சி அமைக்க விசிக ஆதரவு தந்தது.
அதற்கான ஒரு வெகுமதியாகவே எங்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார்கள். அமைச்சரவையில் சேர்ந்துவிட்டதாலேயே நாங்கள் முழுமையாகக் கூட்டணியில் இணைந்துவிட்டதாக அர்த்தமல்ல. இன்னும் தவெகவும் விடுதலைச் சிறுத்தைகளும் அதிகாரப்பூர்வமாக ஒரு கூட்டணியை உருவாக்கிக் கொள்ளவில்லை” என்ற எதார்த்த உண்மையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அமைச்சரவையில் அங்கம் வகித்தாலும், எங்களால் தனித்துவமாக விலகி இருக்க முடியும். நாங்கள் வெறுமனே ஆதரவு மட்டுமே தெரிவிக்கிறோம். அமைச்சரவையில் இருந்தாலும் எங்களால் விலகி இருக்க முடியும். அத்தகைய அரசியல் நிலைப்பாட்டை எங்களால் எடுக்க முடியும். எந்தவொரு கட்டுப்பாடுகளுக்கும் உட்படாமல், “எந்த நேரத்திலும் எங்களால் அமைச்சரவையில் இருந்துகூட வெளியே வர முடியும்” என திருமாவளவன் மிக ஓப்பனாகப் பேசியுள்ளார்.
