https://republictn.com/

அதிமுகவில் பதவி விலகிய சில நிமிடங்களிலேயே தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் அட்டை மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயகுமார் மற்றும் தாராபுரம் பி.சத்யாபாமாவுக்கு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த உறுப்பினர் அட்டைகள் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டு, க்யூஆர் கோடு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், தமிழக வெற்றி கழகத்தில் மேலும் பல அதிமுக எம்எல்ஏக்களுக்கு உறுப்பினர் அட்டைகள் தயாராகவே வைத்திருக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அவர்கள் தலைமைச் செயலகத்திற்கு வந்து கட்சியில் இணையவோ அல்லது ராஜினாமா செய்த பிறகு இணையவோ செய்தால், உடனடியாக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் எத்தனை பேர் இணைய உள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை. சிலர் 15 எம்எல்ஏக்கள் எனவும், சிலர் 30 பேர் வரை இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான கருத்துகளின் அடிப்படையில், இடைத்தேர்தலில் பாதி அளவு, அதாவது சுமார் 20 பேர் விலகி, அதில் 10 பேர் வெற்றி பெற்றாலே தமிழக வெற்றி கழகத்திற்கு அது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால், இது ஒரு ராஜதந்திரமான அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது. கட்சியின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு புதிய அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சியை எந்த அடிப்படையில் அவர்கள் ஆதரிக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும், அடுத்தடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தால், அமைச்சராக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் எதிர்காலத்தில் நெருக்கடி ஏற்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.

அதேபோல், அதிமுகவின் செல்வாக்கு இந்த விலகல்களால் குறையுமா அல்லது மீண்டும் கட்சி எழுச்சி பெறுமா என்பதும் முக்கியமான கேள்வியாக உள்ளது. தற்போது 47 சட்டமன்ற உறுப்பினர்கள் நிலை உருவாகும் என மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், இந்த ஆட்சி இன்னும் ஒரு குழப்பமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அறுதி பெரும்பான்மை தொடர்பான சிக்கலே முக்கிய அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இன்னும் சில நாட்களில் கூடுதல் எம்எல்ஏக்கள் இணையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் மூத்த தலைவர்கள் சிலரும் தமிழக வெற்றி கழகத்தில் இணையக்கூடும் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.

இதனால், முதற்கட்டமாக மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மேலும் பலர் இணையக்கூடும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அதிமுக பல்வேறு அணிகளாக மேலும் பிரியும் சூழ்நிலை உருவாகலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago