பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மதுபான கடையில் இரவு மது பாட்டில் கேட்டு காவலர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு. மேலும் அங்கு வந்த காவல்துறையினரிடமும் மது போதையில் இரண்டு இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் மதுபான கடை அருகே அரசு உதவி பெறும் பள்ளி பேருந்து நிலையம் கோவில் மற்றும் குடியிருப்பு பகுதியில் மதுபான கடை செயல்பட்டு வருகிறது
இந்நிலையில் இந்த மதுபான கடையை இப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாளாக பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த மதுபான கடையில் மது அருந்திவிட்டு அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவதாலும் தொடர்ந்து பிரச்சனை செய்து வருவதாலும் ஒரு சில மது பிரியர்கள் மது அருந்திவிட்டு போதையில் வீட்டுக்குள் வந்து அங்கு இருக்கும் பெண்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
இதனால் தனியார் மதுபான கடையை அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் மாவட்ட மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும், இதுவரை அப்பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையை அகற்றாமல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் உள்ளது.
இந்நிலையில் மதுபான கடையில் அரசு அறிவித்த நேரத்தை விட கூடுதல் நேரங்களாக மது பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதால் இதில் இரவு 11 மணிக்கு மேல் இரண்டு இளைஞர்கள் மது போதையில் மீண்டும் மது குடிப்பதற்காக புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மதுபான கடைக்கு வந்து மதுபாட்டில் வேண்டும் என கேட்டுள்ளனர்.
அப்போது மது கடையில் பணிபுரியும் ஊழியர்கள் இப்போது மது பாட்டில் தர முடியாது என கூறியதாகவும் அப்போது இரண்டு இளைஞர்களும் மது போதையில் தினமும் இரவு இந்த மதுபான கடையில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. ஏன் இன்னைக்கு மட்டும் மது தர மாட்டீர்களா? என அங்குள்ள ஊழியர்களிடம் பெரும் ரகலையில் ஈடுபட்டுள்ளனர். சத்தம் கேட்டு அருகில் குடியிருந்தவர்கள் வெளியே வந்து பார்க்கும்போது இரண்டு இளைஞர்களும் மது பாட்டில் கேட்டு தரக்குறைவான வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் காவல்துறையினருக்கு கொடுத்த தகவலை தொடர்ந்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து இரண்டு இளைஞர்களின் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் போது மது போதையில் இரண்டு இளைஞர்களும் காவல்துறையிடம் “எங்களுக்கு மது பாட்டில் வேணும்“ என மது போதையில் காவல்துறையினிடமே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் காவல்துறையினர் நீண்ட நேரம் போராடி போதையில் இருந்த இருவரையும் ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரகளையில் ஈடுபட்டதில் ஒருவர் தென்காசி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணி புரியும் சிதம்பரம் என தெரிய வந்தது.
மேலும் காவலர் சிதம்பரம் விடுமுறையில் சொந்த ஊரான பெரியகுளத்திற்கு வருகை தந்த நிலையில் அவருடைய நண்பர் அன்பு என்பவருடன் சேர்ந்து மது போதையில் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து இருவர் மீதும் பெரியகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த தனியார் மதுபான கடையை உடனடியாக இப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். இந்த தனியார் மதுபான கடையில் காவலர் ரகளையில் ஈடுபடும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
