நடிகைகள் என்றால் என்ன கிள்ளுக்கீரையா? கேமராவைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டால் எதை வேண்டுமானாலும் உளறலாமா? நடிகை ஸ்ருதி ஹாசன் காட்டிய அதிரடி கோபம், இன்று ஒட்டுமொத்த பாப்பராசி கூட்டத்தையும் அதிர வைத்துள்ளது.
உணவகத்திலிருந்து வெளியே வந்த ஸ்ருதி ஹாசனைச் சூழ்ந்துகொண்ட புகைப்படக் கலைஞர்களில் ஒருவர், எல்லை மீறி அவரை “மம்மி” என்று அழைத்தார். பொதுவாகப் புன்னகையுடன் கடந்து செல்லும் ஸ்ருதி, இந்த முறை ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார். “யார் மம்மி? உன் அம்மாவா இங்கே நிற்கிறார்? என்ன உளறுகிறாய்?” என்று அவர் எகிறிய எகிறலில் அந்த இடமே நிசப்தமானது.
அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணைப் பொது இடத்தில் ‘மம்மி’ என்று அழைப்பது எந்த ஊர் நாகரிகம்? இது மரியாதைக் குறைவு மட்டுமல்ல, ஒரு பெண்ணின் கண்ணியத்தைச் சீண்டிப் பார்க்கும் வக்கிரமான செயல்.
பாப்பராசிகளின் பொறுக்கித் தனம்
பிரபலங்களைப் புகைப்படம் எடுப்பது உங்கள் வேலை, அதற்காக அவர்களை உருவக் கேலி செய்வதும், தேவையற்ற பட்டப் பெயர்களைச் சூட்டுவதும் அராஜகத்தின் உச்சம். பாப்பராசிகள் தங்களை ‘பெரிய கொம்பன்’ என்று நினைத்துக்கொண்டு வரம்பு மீறுவது தொடர்கதையாகிவிட்டது. ஒரு நடிகையை ஒருமையில் பேசுவதும், கேலி செய்வதும் வேலையா? அல்லது வக்கிரமா? ஜெயா பச்சன் முதல் சல்மான் கான் வரை பலரும் எச்சரித்தும், இந்தத் திருந்தாத கூட்டம் இன்னும் ‘பப்ளிசிட்டி’க்காகப் பிரபலங்களின் பொறுமையைச் சோதித்து வருகிறது.
ஸ்ருதியின் நெத்தியடி
இந்த வீடியோ வைரலானதும், ஸ்ருதி செய்தது 100% சரி என்று இணையம் அதிர்கிறது. “யாரோ ஒருவன் ‘மம்மி’ என்று கூப்பிடுவதற்கு அவர் ஒன்றும் அந்த நபரின் தாய் இல்லையே?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். சில மென்மையான மனிதர்கள் ஸ்ருதியின் கோபம் அதிகம் என்று கூப்பாடு போடுகிறார்கள். அவர்களுக்கு ஒன்றுதான் பதில். மரியாதை கொடுக்கத் தெரியாதவனுக்கு, மரியாதையான பதிலைத் தர வேண்டிய அவசியம் இல்லை!
ஸ்ருதி ஹாசன் ஒரு நடிகை மட்டுமல்ல, ஒரு கம்பீரமான பெண் என்பதைத் தோல் உரித்துக் காட்டியுள்ளார். ‘சலார் 2’ மற்றும் ‘ஆகாசம்லோ ஓகா தாரா’ எனப் பெரிய படங்களில் பிஸியாக இருந்தாலும், தனது தன்மானத்தைச் சீண்டும் எவனையும் அவர் விடப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது.
இனிமேலாவது கேமராமேன்கள் வாயைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், ஸ்ருதி போன்ற ‘நெருப்புப் பெண்கள்’ தரும் பதிலடி, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ரணமாக இருக்கும்.
