தவெக தலைவர் விஜயை திமுக செய்தித் தொடர்பாளர் ‘தமிழன்’ பிரசன்னா ஒருமையில், அவதூறாகப் பேசியுள்ள விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பிரசன்னாவின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழன் பிரசன்னா, கரூரில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு தவெக தலைவர் விஜயை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். “டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கினீர்கள் என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்தார்கள். ஆனால், கரூரில் ஒரு பாட்டுப்பாடி 41 பேரை கொலை செய்தான். நீ நல்லவன் தானே? நேர்மையான ஆள் தானே? ஜனநாயகத்தைக் காக்க வந்தவன் தானே?” என்று விஜயை ஒருமையில் ஏகவசனத்தில் விமர்சித்துள்ளார். மேலும், அந்த சம்பவத்திற்குப் பிறகு, குறிப்பிட்ட பகுதி காவல் நிலைய ஆர்டர்லி முதல் டி.எஸ்.பி வரை அனைவரையும் ஒரே உத்தரவில் நெல்லைக்கும் ராமநாதபுரத்திற்கும் தூக்கியடித்தது தான் விஜயின் நேர்மையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு கட்சியின் தலைவரை, தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு தலைவரைப் பொதுவெளியில் இவ்வாறு ஒருமையில் பேசி, கொலையாளி என்ற ரீதியில் சித்தரிப்பது எந்த விதத்தில் நியாயம் என அரசியல் விமர்சகர்களும், தவெக தொண்டர்களும் கொந்தளித்துள்ளனர்.
அரசியல் நாகரிக எல்லைகளை மீறி, தவெக தலைவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியுள்ள தமிழன் பிரசன்னா மீது காவல்துறை உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
