https://republictn.com/

சென்னையில் மசாஜ் சென்டர்கள், ஸ்பாக்கள் என்ற பெயரில் சட்டவிரோதமாக நடக்கும் பாலியல் தொழில்களிடம் இருந்து, காவல்துறையின் உயர் அதிகாரிகள் வரை மாதந்தோறும் கோடிக்கணக்கில் மாமுல் வேட்டை நடத்திய பகீர் விவகாரம் ஒரே ஒரு எஃப்.ஐ.ஆர் மூலம் அம்பலமாகி, ஒட்டுமொத்த காவல் துறையையும் அதிர வைத்துள்ளது.

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்
சென்னையின் முக்கியப் பகுதிகளில் மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் என்ற பெயரில் விபச்சாரத் தொழில்கள் கொடிகட்டிப் பறப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆனால், இந்தத் தொழிலை நடத்துபவர்கள் மிகச் சாதாரணமானவர்கள் அல்ல. ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்துகூட ஆன்லைன், மொபைல் ஆப்கள் மூலமாக இந்தத் தொழிலைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அதிநவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய சர்வதேச நெட்வொர்க்கை இவர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.

ஒரே ஒரு FIR… கசிந்த டைரி
இந்த விபச்சார நெட்வொர்க்கில் பல வி.ஐ.பி-க்கள், முக்கியப் புள்ளிகள் வாடிக்கையாளர்களாகத் தொடர்பு கொண்டுள்ள அதிர்ச்சித் தகவல்களும் தற்போது வெளிவந்துள்ளன. இந்த சட்டவிரோத பாலியல் தொழிலை எவ்வித பயமும் இன்றி நடத்துவதற்கு, காவல்துறையின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே உடந்தையாக இருந்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய திடீர் சோதனையில், விபச்சாரத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர்கள், சென்னை காவல்துறையின் கூடுதல் கமிஷனர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் எவ்வளவு மாமுல் தொகை கைமாறியது என்பது குறித்த துல்லியமான கணக்குகள் அடங்கிய ரகசிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

பாலியல் தொழில் நடக்கும் ஒவ்வொரு இடத்தில் இருந்தும் வசூலிக்கப்படும் தொகையில் சுமார் 50% வரை காவல்துறையின் முக்கிய அதிகாரிகளுக்கு லஞ்சமாகவே கைமாறியுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள அந்த ஒரே ஒரு எஃப்.ஐ.ஆர், சென்னை காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் மூலம் மாமுல் வேட்டை
பழைய பாணியில் கரன்சி நோட்டுகளாக லஞ்சம் வாங்கினால் மாட்டிக் கொள்வோம் என்பதால், இந்த மாமுல் நெட்வொர்க்கில் இருந்த இன்ஸ்பெக்டர்கள், அதிகாரிகள் அனைவரும் ஆன்லைன் பேங்கிங், கூகுள் பே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாகவே லஞ்சப் பணத்தைக் கைமாற்றியுள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் கைகளில் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை ஆதாரங்கள் அனைத்தும் தற்போது சிக்கியுள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் தப்ப முடியாத அளவுக்குச் சட்டம் தன் பிடியை இறுக்கியுள்ளது.

அலறும் உயர் அதிகாரிகள்
பாலியல் தொழில், கற்பழிப்பு வழக்குகள் போன்ற கொடூரக் குற்றங்களுக்குத் துணை போனதோடு, மாமுல் வேட்டையிலும் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர்கள், உயர் அதிகாரிகளின் பெயர் பட்டியல் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவும், லஞ்ச ஒழிப்புத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகத் தடை வாங்கவும் தற்போதே சில உயர் அதிகாரிகள் நீதிமன்றக் கதவுகளைத் தட்டத் தீவிரமாகத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago