ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை திருத்தக் கோரி (Curative Petition) மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை போரூர் அருகே 2017ஆம் ஆண்டு ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் என்பவருக்கு, செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து, தண்டனையை ரத்து செய்து தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி தஷ்வந்த் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை திருத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மதுரையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக தஷ்வந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக தீர்ப்பை திருத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
